மின் பற்றாக்குறை விரைவில் முற்றிலும் நீங்கும்-ஆற்காடு
சென்னை: கடலூர், நாகை மாவட்டங்களில் மிகப் பெரிய அளவிலான மின் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் மூலம் தமிழக மின்பற்றாக்குறை விரைவில் முற்றிலும் நீங்கும் என்று மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ இ.எஸ்.எஸ்.ராமன் இதுகுறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள இந்த இரு பெரும் மின் திட்டங்களால் 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மெர்ச்சன்ட் மின் நிலையங்கள் திட்டத்தின் மூலம் இவை நிறைவேற்றப்படும்.
இதன் மூலம் கோடை காலத்தில் தமிழகம் வழக்கமாக சந்திக்கும் மின்பற்றாக்குறை நீங்கும்.
கோடை காலங்களில் பிற மாநிலங்களிலிருந்து தமிழக மின்வாரியம் மின்சாரத்தைப் பெற்று பற்றாக்குறையை சமாளிக்கிறது. ஆனால் இதற்கு நிறைய பணம் செலவாகிறது. ஆனால் மெர்ச்சன்ட் மின் நிலையங்களில் இது மிகவும் குறைவானதாக இருக்கும்.
மெர்ச்சன்ட் மின் நிலயைங்களிலிருந்து யூனிட் ஒன்று ரூ. 2.50க்கு மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் பெறும். இந்த தொகை அதிகரிக்காமல் அரசு பார்த்துக் கொள்ளும்.
தமிழக அரசு மின்பகிர்மான கழகம் ஒன்றை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த கழகம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள மின் கிரிடுகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்யப்படும். இந்தத் திட்டத்திற்கு ரூ. 25 ஆயிரம் கோடி செலவாகும்.
இந்த கோடை காலத்தில் தமிழகம் மின் வெட்டை சந்திக்காமல் அரசு பார்த்துக் கொள்ளும் என்றார் வீராசாமி.












Click it and Unblock the Notifications