போக்குவரத்து நெரிசல்-சென்னையை இரண்டாக பிரிக்க திட்டம்
சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க நகரை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
அதிமுக எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நேரு,
கடந்த 18 மாதங்களில் புதிதாக ஆயிரம் வழித் தடங்களில் பஸ்கள் விடப்பட்டுள்ளன. இதற்காக 6,000 புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. 1,200 வழித் தடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. புதிதாக 45 ஏ.சி. பஸ்கள் வாங்கப்படவுள்ளன. கோவை, மதுரை மண்டலங்களுக்கு 25 பஸ்கள் வாங்கப்படவுள்ளன என்றார்.
அப்போது அதிமுக உறுப்பினர் எஸ்.வி.சேகர் எழுந்து, பட்டினப்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்களை இயக்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனது தொகுதி நிதியில் இருந்து பட்டினப்பாக்கம் பஸ் நிலையத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளேன் என்றார்.
நேரு: கோயம்பேட்டில் இருந்து கிளம்பும் பஸ்கள் நகரத்தை விட்டு வெளியே செல்வதற்கே இரண்டு மணி நேரம் ஆகிறது. எனவே சென்னை போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சென்னையை இரண்டு பகுதியாக பிரிக்கலாமா என்று கூட ஆராய்ந்து வருகிறோம் என்றார்.
ரேஷனில் ஆட்டுக் கறி-ஞானசேகரன்:
இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் பேசுகையில், ரேஷன் கடைகளில் கிலோ அரிசி இரண்டு ரூபாய் திட்டம் எப்போது வந்ததோ, அப்போது முதல் அரிசி கடத்தலும் அதிகமாகிவிட்டது.
கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் ஹோட்டல்களில் ஒரு இட்லி பிளேட் ஐந்து ரூபாயா உள்ளது. ஹோட்டகளில் உணவு கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சைவ உணவு வகைகள் தான் இப்படி என்றால், அசைவ உணவுப் பொருட்களின் விலையும் தாறுமாறாக இருக்கிறது.
ஆட்டுக்கறி கிலோ 200 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. இதனால் அசைவப் பிரியர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, குறைந்த விலையில் ரேஷன் கடைகளிலேயே ஆட்டுக்கறி கிடைப் பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதைக் கேட்டு சபையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ பாலபாரதி பேசுகையில், காய்கறிகள் விலை மிகக் கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் ரேஷன் கடைகளில் மற்ற பொருட்களை விற்பனை செய்வது போல், காய்கறிகளையும் விற்பனை செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications