சேலம் அருகே உயிருடன் புதைக்கப்பட்ட மாணவர் மீட்பு
சேலம்: சேலம் அருகே ஐடிஐ படிக்கும் மாணவரை உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் முத்தனம்பட்டியைச் சேர்ந்த சூசன் என்பவரின் மகன் ஈஸ்வரன்(20). இவர் அப்பகுதியில் உள்ள ஐடிஐயில் படித்து வருகிறார்.
வழக்கம்போல் நேற்று காலை ஐடிஐக்கு சைக்கிளில் செல்லும் போது, அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகே 3 வாலிபர்கள் வழிமறித்தனர். அவரது முகத்தில் மயக்கப் பொடியை தூவிவிட்டு உயிருடன் அவரை சுடுகாட்டில் புதைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
சுடுகாடு வழியே வந்த வாலிபர் ஒருவர் புதைக்கப்பட்ட ஈஸ்வரன் கால் மட்டும் வெளியே அசைந்ததைப் பார்த்துவிட்டு அருகில் சென்று பார்த்தார். அப்போது முனகல் சத்தமும் கேட்கவே அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர் மணலை அகற்றிவிட்டு ஈஸ்வரனை வெளியில் இழுத்தார்.
மயக்க நிலையில் இருந்த ஈஸ்வரன் முகத்தில் தண்ணீர் தெளித்தவுடன் அவர் சுய நினைவுக்கு திரும்பினார். பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஈஸ்வரனின் தந்தை தனது மகனை புதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications