காதலிக்க மறுத்த பெண்ணை விபச்சாரியாக சித்தரித்தவருக்கு ஜெயில்
சென்னை: காதலிக்க மறுத்த இளம்பெண்ணை விபச்சாரியாக சித்தரித்து இன்டர்நெட்டில் ஆபாசமாக தகவல் வெளியிட்ட என்ஜீனியருக்கு சென்னை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் சுகாஷ் கட்டி(32). இவர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது உடன் படித்த சென்னையை சேர்ந்த மாணவியை காதலித்துள்ளார். அந்த மாணவியை காதலிக்க பல மாணவர்களும் போட்டி போட்டுள்ளனர்.
ஆனால் அந்த பெண் ஒருவரின் காதலை மட்டும் ஏற்றுக்கொண்டு சுகாஷ் கட்டி உட்பட மற்ற ஆண்களின் காதலை நிராகரித்து விட்டாராம்.
இதையடுத்து அனைவரும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு அவரவர் ஊருக்கு சென்றுவிட்டனர்.
ஆனால் அந்தப் பெண் தன்னை காதலிக்காத ஆத்திரத்தில் இருந்த சுகாஷ் கட்டி அவரை விபச்சாரியாக சித்தரித்து இன்டர்நெட்டில் தகவல் வெளியிட்டுள்ளார். கால் கேர்ள் தேவைக்கு இந்தப் பெண்ணை அணுகலாம் என்று தகவல் தந்து, அவரது தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து பலரும் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதிர்ச்சியடைந்த அந்த பெண் சென்னை சைபர்கிரைம் போலீசாரிடம் புகார் செய்தார்.
அவர்கள் விசாரணை நடத்தி சுகாஷ் கட்டியை மும்பையில் வைத்து கைது செய்து சென்னை கொண்டு வந்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்தது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சுகாஷ் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சுகாஷ்கட்டியின் வயதையும், படிப்பையும் கருத்தில் கொண்டு அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை 8 மாதமாக குறைத்து தீர்ப்பளித்தார்.