சிறுதாவூர்: விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மீதான சிறுதாவூர் நில மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை அருகே சிறுதாவூரில் ஜெயலலிதா தங்கும் சொகுசு பங்களா அமைந்துள்ள இடம் குறித்து கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த இடம், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கடந்த 1967ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்தபோது தானமாக வழங்கப்பட்டது.
ஆனால் அந்த நிலத்தை அபகரித்துக் கொண்டு பங்களா கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சினையைக் கையில் எடுத்தது. இந்த நில விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அக்கட்சி கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி, சிறுதாவூர் நில விவகாரம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என சட்டசபையில் ஜூலை 26ம் தேதி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து சிறுதாவூர் பங்களா தனக்கு சொந்தமானதல்ல என்று ஜெயலலிதா மறுத்தார்.
இந்த நிலையில் சித்ரா என்பவர் தமிழக அரசின் விசாரணைக் கமிஷனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கமிஷன் அமைக்கப்பட்டது செல்லாது, அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
தனது மனுவில், வாய்மொழியாக கூறப்படும், வெற்று புகார்களை அடிப்படையாக வைத்து விசாரணைக் கமிஷன் அமைக்க முடியாது.
தமிழக அரசு விசாரணைக் கமிஷன் அமைத்த விதம் சட்டவிரோதமானது, அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது.
அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில்தான் இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.
எனவே திமுக அரசு வெளியிட்ட விசாரணைக் கமிஷன் குறித்த அறிவிப்பையும், விசாரணைக் கமிஷனையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும். வழக்கு முடியும் வரை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டனர். வழக்கு விசாரணை பிப்ரவரி 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.