For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டி.ஆர்.பாலு என்ன கடற்படை என்ஜினியரா?-ஜெ கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: டி.ஆர்.பாலு என்ன கடற்படை பொறியாளரா. அவர் எந்தக் கல்லூரியில் கடல் போக்குவரத்து தொடர்பான பொறியியல் பட்டம் பெற்றார் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 22ம் தேதியன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் சுரீஷ் மேத்தா, சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அந்த கால்வாய் வழியாக சிறிய கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும். பெரிய கப்பல்கள் சென்று வருவதற்கு வாய்ப்பு இல்லை எனக் கூறியிருந்தார்.

நாட்டின் பாதுகாப்பு கருதி சேது சமுத்திர கால்வாய் திட்டம் தொடர்பாக அச்சமின்றி தனது தொழில்நுட்பக் கருத்தை இந்திய நாட்டின் கடற்படை தலைவர் வெளியிட்டுள்ளார்.

கடற்படை தலைவரின் பேட்டியை கண்டவுடன், பழைய வீராணத் திட்டம் போன்று சேது சமுத்திரத் திட்டமும் அதோகதியை அடைந்து விடுமோ என்ற ஆத்திரத்தில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

கடற்படையின் தலைமை பொறுப்பில் உள்ளவர் இதுபோன்று பேட்டி அளித்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும், அவரது கருத்து தேவையற்றது என்றும், ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் கூறியுள்ளார். மேலும் பேட்டியில் கூறியதை வாபஸ் பெற கடற்படை தலைவருக்கு அறிவுறுத்த வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

டி.ஆர்.பாலு என்ன கடற்படை பொறியாளரா. எந்தக் கல்லூரியில் கடல் போக்குவரத்து தொடர்பான பொறியியல் பட்டம் பெற்றார். இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள பொறியியல் கல்லூரியில் படித்தாரா.

இந்தியா அல்லது வெளிநாடுகளில் உள்ள கடற்படை அல்லது ராணுவ கல்விச்சாலையில் அவர் அங்கத்தினரா. இந்தியாவின் ராணுவ அமைச்சராக டி.ஆர்.பாலு தன்னை நினைத்துக் கொள்ளலாமா.

சுயேச்சையான இந்திய நாட்டின் கடற்படைத் தளபதியின் தொழில்நுட்பக் கருத்தை தட்டிக் கேட்கும் அரசமைப்பு அதிகாரத்தை டி.ஆர்.பாலுவுக்கு கொடுத்தது யார் போன்ற கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன.

இந்திய கடற்படை தலைவரை மிரட்டும் வகையில் நடந்து கொண்ட டி.ஆர்.பாலு மீது பிரதமரும், மத்திய அமைச்சரவையும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கும் டி.ஆர்.பாலுவின் தற்போதைய வரம்பு மீறிய செயலை வன்மையாக கண்டிப்பதுடன், பாலுவை உடனடியாக மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X