வங்கக் கடலில் இலங்கை கண்ணிவெடி: வைகோ கடும் கண்டனம்
சென்னை: வங்கக் கடலில், கண்ணிவெடிகளை வைத்துள்ள இலங்கையின் செயல், இந்தியாவின் இறையாண்மையில் தலையிடும் செயலாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக இவற்றை அகற்ற இலங்கைக்கு உத்தரவிட வேண்டும். இலங்கை மறுத்தால் கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
விடுதலைப் புலிகள் நடமாட்டத்தை தடுக்கிறோம் என்ற போர்வையில், கச்சத்தீவு முதல் நெடுந்தீவு வரை கடலில் மிதக்கும் கண்ணிவெடிகளை இலங்கை பொருத்தியுள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். காரணம் கச்சத்தீவு பகுதியில்தான் அவர்களுக்கு மீன்கள் கிடைக்கின்றன. இதனால்தான் உயிரையும் பணயம் வைத்து அப்பகுதிக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை படைகள், கடலில் கண்ணி வெடிகளை போட்டு வைத்துள்ளதால் தமிழக மீனவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
இது தங்களது வாழ்க்கையில் இலங்கை போட்ட அணுகுண்டாக அவர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், இலங்கையின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், கடலுக்கு அடியில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்துள்ள இலங்கை அரசின் செயல் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பதாக உள்ளது. இதனால் இந்திய மீனவர்களுக்கு பேராபத்து ஏற்படும்.
இலங்கை அரசின் இந்த ஆணவப் போக்கு, சர்வதேச கடல் எல்லையில் இந்தியாவுக்கு உள்ள இறையாண்மையில், அப்பட்டமாக தலையிடுவதாகும்.
இலங்கை படைகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்குத் தப்பிப் போவதைத் தடுக்கும் உள்நோக்கத்துடன் இந்த செயலை செய்துள்ளது இலங்கை அரசு.
இது மிகவும் அநாகரீகமான, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை. மேலும், இந்திய மீனவர்களின் வாழ்க்கையிலும் அடித்துள்ளது இலங்கை அரசு. அவர்களின் உரிமைகளை வெட்டும் செயல் இது.
இலங்கையுடன் இந்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தப்படி கச்சத்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை உண்டு. ஆனால் இதுவரை அந்த உரிமையை இந்திய மீனவர்கள் அனுபவிக்க இலங்கை அரசு அனுமதித்ததே இல்லை.
உடனடியாக கண்ணிவெடிகளை அகற்றுமாறு இலங்கை அரசை இந்தியா கேட்டுக் கொள்ள வேண்டும். அது கேட்க மறுத்தால் உடனடியாக கச்சத்தீவை வழங்கியதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு தீவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளார் வைகோ.