கருணாநிதிக்கே கருத்துரிமை நெருக்கடி - திருமா. பேச்சு
சென்னை: தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது குறித்து கருத்து சொன்னதற்காக முதல்வர் கருணாநிதி கண்டனத்திற்கு ஆளானார். அவருக்கே கருத்துரிமை நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்துரிமை மாநாட்டில் கலந்து கொண்டு திருமாவளவன் பேசுகையில், விடுதலைப்புலிகள் மீதுள்ள தடையைக் காரணம் காட்டி இலங்கை தமிழர் படுகொலையை கண்டிப்பதே கூடாது எனவும், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கக் கூடாது எனவும் தமிழகத்தில் உள்ள சிலர் அரசியல் ஆதாயத்திற்காக எதிர்த்து வருகின்றனர்.
இது ஜனநாயகத்துக்கும், மனித நேயத்துக்கும் எதிரான பாசிசக் கொடுமை நெறிப் போக்காகும்.
கருத்துரிமை என்ற பெயரில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை குறித்து விடுதலை சிறுத்தைகள் பேசுகின்றனர் என சில கட்சிகள் சட்டப் பேரவையில் கூறியுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தவர்களை ஆதரிக்கலாமா என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். விடுதலைப்புலிகளை தீவிரமாக ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளை ஆதரிப்பதை எதிர்த்து பேச சிலருக்கு உரிமை இருக்கும் பட்சத்தில் அதை நீக்க கோருவதற்கு மக்களுக்கு உரிமை கிடையாதா.
தமிழக முதல்வர் கருணாநிதி கருத்துரிமைக்கே நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வன் படுகொலைக்கு கருணாநிதி இரங்கல் கவிதை வெளியிட்டதற்கு சிலர் கண்டன அறிக்கையை வெளியிடுகின்றனர்.
எனவே கருத்துரிமை பறிக்கப்படுகிறபோது யார் அமைதி காத்தாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் அமைதி காக்கக் கூடாது. இலங்கையில் நடைபெறும் இன படுகொலைக்கு கண்டிப்பதற்கும், ஈழத் தமிழர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கும் விடுதலை சிறுத்தைகளுக்கு உரிமை உள்ளது. இதை உணர்த்தவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த கருத்துரிமை மீட்பு மாநாட்டை காரணம் காட்டி விடுதலை சிறுத்தைகளை தடை செய்ய முயன்றால் அது மாபெரும் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் உருவாக வழி வகுத்துவிடும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications