அணு சக்தி ஒப்பந்தத்தை அரசு நிறைவேற்றலாம்: உச்சநீதிமன்றம்
டெல்லி: அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அரசே அதை நிறைவேற்றலாம் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. இதனால் அணு சக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து வரும் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரவி பிரகாஷ் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பில்,
மத்திய அரசு சர்வதேச அளவில் எந்த ஒப்பந்தம் செய்தாலும், அதை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பின்னரே செய்ய வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் அதை மனுதாரர் தாராளமாக தெரிவிக்கலாம்.
இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விவகாரத்திலும் இது பொருந்தும். இந்த ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தில் அரசு ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை. தானாகவே கையெழுத்திட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மத்திய அரசுக்கு புது உற்சாகத்தை அளிக்கும் எனத் தெரிகிறது. மேலும் அணு சக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து வரும் இடதுசாரிகள் மற்றும் பிற எதிர்க்கட்சிகளுக்கு இது பெருத்த பின்னடவை ஏற்படுத்தும்.