அம்பேத்கர் சிலையின் கை சேதம்-காரைக்குடியில் பெரும் பதட்டம்

காரைக்குடி: காரைக்குடியில் அம்பேத்கர் சிலையின் கை சேதப்படுத்தப்பட்டதால் அங்கு பதட்டம் நிலவுகிறது. சிலையை சேதப்படுத்திய விஷமிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி செக்காலை ரோட்டில் நகராட்சி விருந்தினர் பங்களா அருகே உள்ள டாக்டர் அம்பேத்கரின் ஆளுயர சிமென்ட் சிலையின் கை சேதப்பட்டப்பட்டதை சிலர் பார்த்து பதட்டம் அடைந்தனர். இந்த செய்தி நகர் முழுவதும் விரைவில் பரவியது.
இதையடுத்து பல்வேறு தாழ்த்தப்பட்ட சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சிலையை சேதப்படுத்திய விஷமிகளைக் கைது செய்யக் கோரி அவர்கள் கோஷமிட்டனர். மேலும் 100 அடி சாலையில், பெரியார் சிலை அருகே சாலை மறியலிலும் அவர்கள் குதித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். காவல்துறை எஸ்.பி. கண்ணன், வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். கூட்டத்தினரை அமைதிப்படுத்தினர். விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
பின்னர் அனைவரும் அம்பேத்கர் சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது.
சிலையை சேதப்படுத்திய விஷமிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications