போலி ஜாதி சான்றிதழ்-ஊசலாடும் ஊராட்சி தலைவர் பதவி !
மதுரை: போலி ஜாதிச் சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற பள்ளபட்டி ஊராட்சி தலைவரை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளதால் ஊராட்சி தலைவரின் பதவி ஊசலாடி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம் பள்ளபட்டியில் ஊராட்சி தலைவராக இருப்பவர் ஜெயா. இவர் உள்ளாட்சி தேர்தலின் போது போலியான ஜாதி சான்று கொடுத்து வெற்றி பெற்றதாக இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த ராணி என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடத்திய நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை நடத்த திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு குறித்து ஜெயா, ராணியிடம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் விழிப்புணர்வுக் குழு உறுப்பினர்கள் சிற்றசு, சுமதி ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணையில் ஜெயா, எஸ்தர் என்ற பெயரில் பள்ளியில் படித்து தெரிய வந்தது.
ஆனால், தான் முதியோர் கல்வியில் படித்தாக பொய்யான தகவல் கொடுத்திருந்தார் ஜெயா.
மேலும் ஜெயா கொடுத்த ஜாதி சான்றும் பொய் என ஆவண ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க குழு பரிந்துரை செய்தது.
இதனால் ஜெயாவின் ஊராட்சி தலைவர் பதவி ஊசலாட்டத்தில் உள்ளது.