தமிழகத்திற்கு பிரபாகரன் வரவில்லை-போலீஸ் விளக்கம்
ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தமிழகத்திற்குள் ஊடுறுவியிருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று தமிழக கியூ பிரிவு போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
இலங்கையில் போர் உக்கிரமடைந்து வருகிறது. விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலை இலங்கை படைகள் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், ஜனவரி 10ம் தேதி பிரபாகரனும், அவரது மனைவி மதி வதனியும், படகு மூலம் அகதிகளோடு அகதிகளாக ராமேஸ்வரத்திற்கு வந்ததாகவும், அங்கிருந்து கோவைக்கு அவர்கள் சென்று விட்டதாகவும் தகவல் பரவி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பும் இதுபோல மதிவதனி ஊடுறுவியதாக தகவல் பரவி பின்னர் அது வதந்தி என போலீஸாரால் மறுக்கப்பட்டது.
ஆனால் பிரபாரகன் ஊடுறுவியுள்ளதாக வெளியான தகவலால் ராமேஸ்வரம் முழுவதும் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து கடலோரப் பகுதிகளில் உள்ள அனைத்து அகதிகள் முகாம்களிலும் கியூ பிரிவு போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து பிரபாகரன் வந்துள்ளதாக வெளியான தகவல் வதந்தி என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் கிளிநொச்சியில் உள்ள கல்மகுளம் என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் எக்ஸ்ரே முகாம் எனப்படும் மிகவும் பலத்த பாதுகாப்புடன் கூடிய முக்கிய முகாம் மீது இலங்கை விமானப்படை குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.
தாக்குதலுக்கு சில நிமிடங்கள் முன்பு வரை பிரபாகரன் அங்குதான் இருந்ததாகவும், அவர் சென்ற சில நிமிடங்களில் தாக்குதல் நடந்ததால் அவர் உயிர் தப்பியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை புலிகள் மறுத்தனர்.
இந்த நிலையில் பிரபாகரன் தமிழகத்திற்குள் வந்துள்ளதாக வெளியான தகவலால் ராமேஸ்வரம் உள்பட தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.
பிரபாகரனுக்கு கோவையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக 10 பேர் கொண்ட புலிகள் குழு ஒன்று ஏற்கனவே தமிழகத்திற்குள் வந்து விட்டதாகவும், அதற்கான ஏற்பாடுகளை முடிந்த பின்னர்தான் பிரபாகரனும், அவரது மனைவியும் ராமேஸ்வரம் வந்ததாகவும் கூறப்படுகிறது.
பிரபாகரன் வருகை குறித்துத்தான் ராமேஸ்வரம் முழுவதும் மக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டுள்ளனர்.
ஆனால் இவை எதிலும் உண்மை இல்லை என்று கியூ பிரிவு போலீஸார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இருப்பினும் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அகதிகள் முகாம்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.