குடிநீரில் சாக்கடை: 3 கிராமங்களில் வாந்தி பேதி-200 பேர் பாதிப்பு
நெல்லை: நெல்லை அருகே 3 கிராமங்களில் குடிநீரில் சாக்கடை கலந்ததால் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள ராமையன்பட்டியில் நேற்று திடீரென குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலருக்கு வாந்தி பேதி ஏற்பட்டது. இதனால் பாதிப்புக்குள்ளான 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுகாதார மையம், பாளை அரசு மருத்துவமனை, தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.
தச்சநல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் ராமையன்பட்டியை சேர்ந்த முருகேசன், சண்முகவேல், மாரிசெல்வி, தச்சநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மாரிசெல்வன், முத்துசெல்வி, சந்திரா, வள்ளியம்மாள், சந்திரா, பிரியா, வெள்ளப்பாண்டி, ஆகியோரும், பாளை அரசு மருத்துவமனையில் ராதிகா, சீனியம்மாள், ராஜன், சண்முகனி, எலிசபேத், சொள்ளமாரி, கண்ணம்மா, சுடலைமணி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்துக் கூறுகையில் எங்களுக்கு பொது குடிநீர் குழாய் கிடையாது. ஊர் அருகில் இருக்கும் குளத்தில் இருந்து போர் போட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. மாநகர பகுதியில் இருநது வரும் பாதாள சாக்கடை கழிவு நீர், குளத்தின் அருகே கலக்கிறது.
மேலும் குப்பைகளும் குவிந்து கிடக்கின்றன. இதனால் குளத்து நீர் மாசுப்பட்டு வாந்தி, பேதி ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மலைராஜா எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் ராமையன்பட்டிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதேபோல தேனீர்குளம், தச்சநல்லூர் ஆகிய கிராமங்களிலும் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை தவிர தச்சநல்லூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர். அங்கு நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன.