வளைகுடா நாடுகளில் குடியரசு தின கொண்டாட்டம் கோலாகலம்
துபாய்: வளைகுடா நாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குடியரசு தின விழாவை நேற்று சிறப்பாக கொண்டாடினர்.
வளைகுடா நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நேற்று நடந்த குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.
பல்வேறு இடங்களில் தேசியக் கொடி ஏற்றும் வைபவங்களும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான இந்தியத் தூதர் தல்மிஸ் அகமது, துபாய் இந்திய துணைத் தூதர் வேணு ராஜாமணி ஆகியோர் அபுதாபி மற்றும் துபாயில் நடந்த குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு கொடியேற்றினர்.
கடந்த ஒரு வருடமாக இந்திய தூதரகம் இந்திய சுதந்திர தினத்தின் 60வது ஆண்டு விழாவை கொண்டாடி வந்தது. நேற்று அதன் நிறைவு விழா நடைபெற்றது.
இதையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிக்கும், இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பிரபல பாடகர்கள் ஆஷா போன்ஸ்லே, எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே. ஏசுதாஸ் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
குவைத்தில், உள்ள இந்திய தூதரகத்தில் தூதர் கணபதி தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இந்தியப் பள்ளிகளிலிருந்து வந்த மாணவ, மாணவியர் தேச பக்திப் பாடல்களைப் பாடினர். 3500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதேபோல சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகளிலும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன.