ஓபாமாவுக்கு சிறப்பான 2வது வெற்றி- நெருக்கடியில் ஹில்லாரி
வாஷிங்டன்: தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த அதிபர் தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான முதன்மை வாக்கெடுப்பில், ஜனநாயகக் கட்சியின் பாரக் ஓபாமாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஓபாமாவிடம் ஹில்லாரி கிளிண்டன் 2வது முறையாக தோல்வியைத் தழுவியுள்ளார்.
ஓபாமாவுக்கு 55 சவீத வாக்குகள் கிடைத்தன. ஹில்லாரிக்கு 27 சதவீத வாக்குகளே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஜான் எட்வர்ட்ஸ் 18 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
இந்த மாகாணம் எட்வர்ட்ஸின் சொந்த மாகாணமாகும். ஆனால் அங்கேயே அவர் தோல்வியைத் தழுவியுள்ளார்.
ஓபாமாவின் வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முதலில் அவர் அயோவா மாகாணத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஹில்லாரியை வீழ்த்தினார். ஆனால் அதன் பின்னர் நடந்த நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் நிவேதா மாகாண வாக்கெடுப்பில் ஹில்லாரியிடம் தோல்வி அடைந்தார்.
தற்போது தெற்கு கரோலினாவில் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளதன் மூலம் ஹில்லாரிக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்தியுள்ளார். தற்போது இருவரும் தலா 2 வெற்றிகளைப் பெற்று சம நிலையில் உள்ளதால் ஜனநாயகக் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெற்கு கரோலினாவில் உள்ள வாக்காளர்களில் பாதிப் பேர் கருப்பர் இனவத்தவர் ஆவர். ஓபாமாவும் கருப்பர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான். இங்குள்ள கருப்பர்களில் முக்கால்வாசிப் பேர் ஓபாமாவுக்கு ஆதரவாக வாக்ளித்துள்ளனர். ஹில்லாரிக்கும் கணிசமான கருப்பர்கள் வாக்களித்துள்ளனர்.
இருப்பினும் வாக்கெடுப்பில் ஹில்லாரியை மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஓபாமா தோற்கடித்துள்ளது ஹில்லாரிக்குக் கிடைத்த மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
ஹில்லாரிக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தோல்விக்கு ஓபாமா மீது தொடர்ந்து தனிப்பட்ட முறையில் அவர் பிரசாரம் மேற்கொண்டுள்ளதே காரணம் என கூறப்படுகிறது. இந்த பிரசாரத்திற்கு வாக்காளர்களிடையே ஆதரவு கிடைக்கவில்ல என்பது நிரூபணமாகியுள்ளது.
இந்தப் பிரசாரத்தை ஹில்லாரி நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவருக்கு எதிர் வரும் வாக்கெடுப்புகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் என பல்வேறு பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனவரி 29ம் தேதி புளோரிடா மாகாணத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான முதன்மை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அடுத்து பிப்ரவரி 5ம் தேதி மிகப் பெரிய அளவிலான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. சூப்பர் செவ்வாய் (சூப்பர் ட்யூஸ்டே) என அழைக்கப்படும் அன்றைய தினத்தில், மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 22 மாகாணங்களுக்கு வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.
இதில் வெளியாகும் முடிவுகளை அடிப்படையாக வைத்து ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகள் சார்பில் யார் அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடப் போகிறார் என்பதை ஓரளவு உறுதியாக சொல்லி விட முடியும்.
கென்னடி மகள் ஓபாமாவுக்கு ஆதரவு:
இதற்கிடையே, ஓபாமாவுக்கு, முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் மகள் கரோலின் கென்னடி ஆதரவு ெதரிவித்துள்ளார். தனது தந்தையைப் போலவே அமெரிக்கர்களை சிறப்பாக வழி நடத்திச் செல்வார் ஓபாமா என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
கரோலின் இதுகுறித்துக் கூறுகையில், எனது தந்தையைப் போல அமெரிக்கர்களை சிறப்பாக வழி நடத்திச் சென்ற அதிபரை நான் பார்த்ததே இல்லை. இப்போது அதே அளவிலான குணத்துடன், திறமையுடன், தகுதியுடன் ஓபாமாவை நான் பார்க்கிறேன்.
எனக்கு மட்டுமல்லாமல், எனது தலைமுறையைச் சேர்ந்த மற்ற அமெரிக்கர்களின் எண்ணமும் கூட இதுவாகத்தான் உள்ளது என்று கூறியுள்ளார் கரோலின்.
வருகிற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.