யு.எஸ்சில் கொல்லப்பட்ட இந்திய மாணவர் உடல் தகனம்
ஜாம்ஷெட்பூர்: அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்திய மாணவர் அபிஜித் மஹதோவின் உடல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் ேசர்ந்தவர் அபிஜித் மஹதோ. இவர் அமெரிக்காவின் துர்ஹாம் நகரில் பி.எச்.டி. ஆய்வுப் படிப்பை மேற்கொண்டிருந்தார். ஜனவரி 18ம் தேதி இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக 19 வயது கருப்பர் இன வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அபிஜித் மஹதோவின் உடல் நேற்று ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்குக் கொண்டு வரப்பட்டது. அவரது உடலை மாநில துணை முதல்வர் சுதிர் மஹதோ, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா துணைத் தலைவர் சம்பாய் சோரன் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.
பின்னர், மஹதோவின் உடலுடன் அவர்கள், அவரது பூர்வீக ஊரான கமாரியா கிராமத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு உடல் தகனம் நடைபெற்றது.
அபிஜித்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடியிருந்தனர். பின்னர் பார்வதி காட் சுடுகாட்டில் மஹதோவின் உடல் தகனம் செய்யப்பட்டது.