பொன்னையனுக்கு அரசியல் ஆலோசகர் பதவி-ஜெ அறிவிப்பு
சென்னை: அதிமுகவில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பொன்னையனுக்கு அரசியல் ஆலோசகர் பொறுப்பை தந்துள்ளார் ஜெயலலிதா.
அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த பொன்னையனுக்கு ஆட்சி போனதும் அவைத் தலைவர் பதவியைத் தந்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ஆனால், திடீரென அவரை ஒதுக்க ஆரம்பித்தார்.
சமீப காலமாக கட்சிப் பதவிகள் ஏதும் இல்லாததாலும் உரிய மரியாதை கிடைக்காததாலும் ஒதுங்கியே இருந்து வந்தார். பொன்னையன் ஒதுக்கப்பட்டு வைக்கப்பட்டதற்கு சசிகலா குரூப் தான் காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் போயஸ் தோடட்டத்தில் சசிகலாவின் கை வலுவிழந்து வருவதாக செய்திகள் வரும் நிலையில் பொன்னையனுக்கு முக்கியமான பதவியைத் தந்துள்ளைர் ஜெயலலிதா. இதுவரை அதிமுகவில் இல்லாத அரசியல் ஆலோசகர் என்ற பதவியை அவருக்காக உருவாக்கி அதில் அமர்த்தியுள்ளார் ஜெயலலிதா.
பண்ருட்டி ராமச்சந்திரனின் முழு ஆலோசனையின்பேரில் கட்சியை நடத்தி வரும் விஜய்காந்த் படு வேகத்தில் அரசியல் பாய்ச்சல் காட்டி வருகிறார். விஜய்காந்தின் துரிதமான வளர்ச்சிக்கு பண்ருட்டி போட்டுத் தரும் திட்டங்களும், ஆலோசனைகளுமே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
அதே அளவுக்கு அரசியலில் ஊறித் திளைத்தவர் பொன்னையன். பண்ருட்டியைப் போலவே எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டவர். அதிமுகவை மிக நன்றாக அறிந்தவர். பண்ருட்டி-விஜய்காந்துக்கு செக் வைக்க பொன்னையன் போன்ற ஒருவரின் ஆலோசனைகள் மிக முக்கியம் என்பதை இப்போது உணர்ந்துள்ளார் ஜெயலலிதா.
இதையடுத்து மீண்டும் பொன்னையன் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கட்சியின் உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும் இல்லாதபோதும் அவரது காலில் விழாத மிகச் சில அதிமுக முக்கியத் தலைவர்களில் பொன்னையனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியில் நடப்பதை உள்ளதை உள்ளபடியே ஜெயலலிதாவிடம் சொல்லிவிடும் தன்மை கொண்டவர்.
பொன்னையன் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது சசிகலா ஆதரவாளர்களுக்கு நிச்சயம் சிக்கலை உருவாக்கும்.