தென்காசியில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை
ஆலங்குளம்: நெல்லை மாவட்ட பாஜக வர்த்தகப் பிரிவு முன்னாள் தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தென்காசியைச் சேர்ந்த ராஜபாண்டி (வயது 53) நெல்லை மாவட்ட பாஜக வர்த்தக பிரிவுத் தலைவராக இருந்தவர். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.
இன்று காலை தென்காசியில் இருந்து ஸ்கூட்டரில் ஆலங்குளம் வந்தார். கல்லூத்து செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இவரை ஒரு கும்பல் வழிமறித்து வீச்சரிவாள்களால் வெட்டியது.
தப்பி ஓடிய அவரை அந்தக் கும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டித் தள்ளியதில் அந்த இடத்திலேயே பலியானார். அந்த வழியாக வந்த மினி பஸ் பயணிகள் இதைக் கண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டு அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
தென்காசியில் இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் படுகொலையை தொடர்ந்து 2 பிரிவினருக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இந் நிலையில் சில தினங்களுக்கு முன்பு தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலும், புதிய பஸ் நிலையத்திலும் குண்டுகள் வெடித்தன. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வந்த நிலையில் பாஜக பிரமுகர் ராஜபாண்டியின் கொலை நடந்துள்ளது.
2 பிரிவினருக்கு இடையே நடந்து வரும் மோதல் தொடர்பாக இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வட்டித் தொழில் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான ராஜபாண்டிக்கு இன்று 53வது பிறந்த நாளாகும்.