சட்டசபையில் காங்கிரஸ் வெளிநடப்பு-அதிர்ச்சியில் திமுக: கூட்டணியில் சிக்கல்

சென்னை: விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டசபையில் இன்று காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், இம்முறை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டசபையில் இருந்து வெளியேறுவது இதுவே முதன்முறையாகும்.
இதன்மூலம் திமுகவுக்கு பெரும் சிக்கலை காங்கிரஸ் உருவாக்கியுள்ளது.
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அமைப்புகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து விவாதிக்க வேண்டும் என நேற்று காங்கிரஸ் கோரியது.
இது குறித்து இன்று விவாதிக்கலாம் என திமுக தெரிவித்தது. இதையடுத்து காங்கிரஸ் அமைதியானது.
இந் நிலையில் இன்று இந்தப் பிரச்சனையை காங்கிரஸ் மீண்டும் எழுப்பியது. புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரும் திருமாவளவனை உடனே கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரினர்.
இதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, வெறுமனே ஒரு இயக்கத்துக்கு வாய் மொழியில் ஆதரவு தெரிவித்தால் அது அந்த இயக்கத்துக்கு உதவுவதாக ஆகாது, அவ்வாறு கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக் காட்டினார்.
ஆனால், இந்த பதிலில் திருப்தியில்லை என்று கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து எழுந்த காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், புலிகளுக்கு ஆதரவாக திருமாவளவன் நடத்திய அந்த கூட்டத்துக்கு முதலில் அரசு எப்படி அனுமதி அளித்தது. அங்கே பிரபாகரனின் படம் வைக்கக் கூட அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்துக்கு போலீஸ் அனுமதியே தந்திருக்கக் கூடாது.
புலிகளை வெளிப்படையாக ஆதரித்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும். பொடா சட்டம் இல்லாத நிலையில் புலிகளை வெளிப்படையாக ஆதரிக்கும் திருமாவளவன் மீது வேறு கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று கூறியபடி ஞானசேகரன் வெளிநடப்பு செய்தார்.
அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் திருமாவளவனைக் கண்டித்து கோஷமிட்டபடி வெளிநடப்பு செய்தனர்.
இதை திமுக தரப்பு அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ்,
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்த புலிகளை ஆதரிக்கும் எந்த அமைப்பையும் காங்கிரஸ் மன்னிக்காது, ஏற்காது. தமிழகத்தில் ஆயுத கலாச்சாரத்தை புலிகள் பரப்பி வருகின்றனர். இதனால் நாட்டுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.
புலிகளை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்கும் அமைப்புகள், நபர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தவே வெளிநடப்பு செய்தோம்.












Click it and Unblock the Notifications