கண்மாய்-ஏரி மீனுக்கு வந்த திடீர் 'மவுசு'
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் இதுவரை ரூ. 4 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவதை தடுத்து நிறுத்தக் கோரியும், கடத்திச் செல்லப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்கக் கோரியும், கச்சத்தீவு அருகே இலங்கை அரசு கடலில் போட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றக் கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கடந்த 19ம் தேதியிருந்து 3,000க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நூற்றுக்கணக்கான இயந்திரப் படகுகளும், நாட்டுப் படகுகளும் மீன் பிடிக்கச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீனவர்களின் இந்த தொடர் போராட்டத்தால் 10,000 மீனவர் குடும்பங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விசைப் படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் வாரத்திற்கு 3 முறை செல்வார்களாம். ஸ்டிரைக்கால் மீன்வரத்து சுத்தமாக இல்லாததால், கொச்சி, தூத்துக்குடி, சென்னை துறைமுகம் மூலம் வெளிநாடுகளுக்கு மீன்கள் ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பறவைக் காய்ச்சல் பீதி தமிழகத்தில் இருப்பதால் அனைவரும் மீன்களை நாடி செல்கின்றனர். ஆனால் தற்போது மீன்வரத்து இல்லாததால் ஏரி, குளங்களில் பிடிக்கப்படும் மீன்களை மீன் வியாபாரிகள் அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
மீனவர்களின் இந்த போராட்டம் குறித்து அரசு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காததால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள படகு உரிமையாளர்கள், முகவர்கள், தொழிலாளிகள், படகு மெக்கானிக்குகள் அனைவரும் பெரும் சோகத்துடன் உள்ளனர்.
இந்த ஸ்டிரைக்கால் ரூ.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெறும் மீனவர்கள் போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications