அழகிரி நண்பர் வீட்டில் பெண் தற்கொலை: விசாரணை கமிஷன் கோரும் ஜெ. கோரிக்கை

மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் நாகேஷ் டி.வி.எஸ். நகரில் வசித்து வருகிறார். மு.க.அழகிரியின் மிக நெருங்கிய நண்பர். நாகேஷ் தனது தாயாரை கவனித்துக் கொள்ள நியமித்த நர்ஸ் கற்பகவள்ளி நாகேஷ் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
மதுரையில் நாகேஷ் என்பவரது இல்லத்தில் வேலை செய்து வந்த கற்பகவள்ளி என்னும் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக செய்தி வந்துள்ளது. மிரட்டல்களுக்கு பயந்து அவசர அவசரமாக அவரின் உடலை எரிக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
நாகேஷின் உடல்நலம் சரியில்லாத தாயாரை வீட்டில் தங்கி கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட கற்பகவள்ளி என்னும் பெண் அந்த வீட்டிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக செய்தி வந்தது.
கற்பகவள்ளியின் உடலைக் கைப்பற்றி அவருடைய பெற்றோருக்குத் தெரிவிக்காமல் காவல்துறையினர் பிரேத பரிசோதனை நடத்தியதாகவும், இதன் காரணமாக கற்பகவள்ளியின் உடலை பெற்றுக் கொள்ள அவரின் உறவினர்கள் மறுத்துவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
காவல் துறையினர் பெற்றோரை மிரட்டி கற்பகவள்ளியின் உடலை புதைக்கவிடாமல் தடுத்து எரிக்கச் செய்த காரணம் என்ன. மதுரை அரசு மருத்துவமனையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருக்கும் அசாதரணாமான சூழ்நிலைக்குக் காரணம் என்ன.
ஏற்கனவே ரவுடிகளின் தொல்லைகளாலும், தீவிரவாத நடவடிக்கைகளாலும், பத்திரிக்கை அலுவலக எரிப்பு சம்பவத்தாலும் பயந்து நடுங்கி உறைந்து போயிருக்கும் மதுரை மக்கள் மேற்படி சம்பவத்தில் மேலும் கலக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
சட்டம்-ஒழுங்கு, தமிழகத்தில் பட்டு வரும் பாட்டுக்கு இந்த மர்ம மரணம் ஒரு பதச்சோறு. இந்த சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏழை பெண் கற்பகவள்ளியின் மர்ம மரணம் குறித்து உடனடியாக நீதி விசாரணை நடத்த விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications