For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொழுது போக்கு பூங்காக்களை ஆய்வு செய்ய கமிட்டி!

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: பொழுது போக்கு பூங்காக்களில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க அடிக்கடி ஆய்வு நடத்த தனிக் கமிட்டி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் சமீபத்தில் உல்லாசப் படகு சவாரியின்போது
படகு கவிழ்ந்து அனுசுயா என்ற சிறுமி பலியானார்.

பூங்காவில் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, முதலுதவி வசதிகளோ இல்லாததே தனது மகளின் சாவுக்கு காரணம் என சிறுமியின் தந்தை ராஜூ குற்றம் சாட்டினார்.

இதையடுத்து குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சென்னை நகர போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மத்திய சென்னை போலீஸ் இணை கமிஷனர் பாலசுப்பிரமணியம் மேற்பார்வையில் விசாரணை முடுக்கி விடப்பட்டு பூங்கா நிர்வாகிகள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், குயின்ஸ்லேண்ட் பூங்கா அரசுக்கு சொந்தமான ஏரியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு எம்.ஜி.எம். பொழுது போக்குப் பூங்காவில் ராட்சத ராட்டினம் மோதி மாணவி ஒருவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். இன்னும் படுத்த படுக்கையாகவே அவர் உள்ளார்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்களிலும் சரியான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுலாத் துறை செயலாளர் இறையன்பு மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பொழுதுபோக்கு பூங்காக்களில் ஏற்படும் உயிர் பலியை தடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்களில் அங்குள்ள அரசு அதிகாரிகள் வாரத்துக்கு ஒருமுறை பூங்காவுக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வது வழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இங்குள்ள பொழுதுபோக்கு பூங்காக்களில் இதுபோன்று கண்காணிப்பு பணிகளை யாரும் மேற்கொள்வதில்லை. யாருடைய கட்டுப்பாடுமின்றி தங்கள் இஷ்டத்துக்கு பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன.

குயின்ஸ்லேண்ட் பூங்காவில் சிறுமி பலியானதற்கு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்படாததே காரணம் என்று தெரிந்துள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற உயிர் பலிகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அதிகாரிகள் மிகவும் உறுதியுடன் உள்ளனர்.

எனவே பொழுதுபோக்கு பூங்காக்களில் அடிக்கடி சென்று ஆய்வு நடத்தவும், கண்காணிக்கவும் தனிகமிட்டி அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பொழுதுபோக்கு பூங்காக்களில் உள்ள ராட்சத ராட்டினங்களின் உயரத்தை குறைக்கவும், உல்லாச படகு சவாரியின்போது படகுகள் அசுர வேகத்தில் செல்வதைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

அதே நேரத்தில் பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள் ஏதாவது விபத்தில் சிக்கினால் அவர்களை அங்கிருந்து உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கவும், முதலுதவி சிகிச்சை அளிக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்ய பொழுதுபோக்கு நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்த அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான சுற்றறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்களுக்கும் அனுப்பப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X