ராணுவம் அதிரடித் தாக்குதல் - 35 விடுதலைப் புலிகள் நிலைகள் அழிப்பு
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா செய்தியாளர்களிடம் கூறுகையில், வான் தாக்குதல் மற்றும் பீரங்கிப் படைத் தாக்குதலுடன் இணைந்து ராணுவம் இன்று அதிகாலை விடுதலைப் புலிகளின் பல்வேறு நிலைகள் மீது அதிரடித் தாக்குதலில் இறங்கியது.
இதில், முகமாலை, நாகர்கோவில், கிலாலி பகுதிகளில் மொத்தம் 35 புலிகளின் நிலைகள் தகர்க்கப்பட்டன.
இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 30 பேர் காயமுற்றிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்று விடுதலைப் புலிகளின் தகவல் பரிமாற்றத்தை இடைமறித்துக் கேட்டதில் தெரிய வந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் டி-55 ரக டாங்குகள் பயன்படுத்தப்பட்ன. ராணுவத் தரப்பில் 7 பேர் மட்டுமே காயமடைந்தனர்.
விடுதலைப் புலிகளின் முதல் நிலை அரண்களைத் தகர்த்த பின்னர் ராணுவத்தினர் தங்களது முகாம்களுக்கு பத்திரமாக திரும்பி விட்னர் என்றார் அவர்.
இந்த நிலையில், யாழ் குடா பகுதியில் ராணுவம் நடத்திய மும்முனைத் தாக்குதலை விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டதாக புலிகள் ஆதரவு இணையதளமான புதினம் செய்தி வெளியிட்டுள்ளது. 45 நிமிட நேரம் வரை இந்த சண்டை நடந்ததாகவும், அதன் இறுதியில் ராணுவம் பின் வாங்கிச் சென்று விட்டதாகவும் புதினம் செய்தி கூறுகிறது.
இதற்கிடையே, முகமாலை பகுதியில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இன்று காலை விமானப்படை ஜெட் விமானங்கள் குண்டு வீசி தாக்கின.
முகமாலையிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வட்டுக்காடு என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் தளம் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இதில் அந்த தளம் முழுமையாக தகர்க்கப்பட்டதாக விமானப்படை விங் கமாண்டர் ஆண்டி விஜேசூர்யா தெரிவித்துள்ளார்.