மதுரையை தலைநகரமாக்கி தனி மாநிலம் - மூ.மு.க. தீர்மானம்
சென்னை: மதுரை நகரை தலைநகரமாக்கி தென் தமிழகம் என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறேவற்றப்பட்டுள்ளது.
அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் 27வது மாநில செயற்குழு கூட்டம் சென்னை, தி.நகரில் உள்ள ஜி.என்.செட்டி ரோட்டில் இருக்கும் மீனாட்சி பவனில் தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமையில் நடந்தது.
தமிழகத்தை இரண்டாகப் பிரித்து தென்தமிழகத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை 2004ம் ஆண்டு முதல் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறோம். நமது கோரிக்கைக்கு மேலும் வலுசேர்ப்பது போல் வன்னியர் சங்கங்கள் சார்பாகவும் வட மாநில கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தமிழகத்தை இரண்டாக பிரித்து காவிரியை எல்லையாக கொண்டு, மதுரை நகரை தலைநகரமாக வைத்து தென் மாநிலம் என்ற புதிய மாநிலத்தை உருவாக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டும் அதற்கான பணி நடக்கவில்லை. இதை கண்டித்து போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்.
அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட மருதுபாண்டியர் சிலைகளை மீண்டும் கிராம மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி சிவகங்கை மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூரில் ரத யாத்திரை நடத்தி மாநாடு நடத்தப்படும்.
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடக்க சட்டசபையில் சிறப்பு மசோதா கொண்டு வரவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications