பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்கிறது!
டெல்லி: பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாயும் உயர்த்த மத்திய அரசுக்கு பெட்ரோலியத் துறை பரிந்துரை செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலையையும் உயர்த்த வேண்டும் என எண்ணை நிறுவனங்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் சட்டசபைத் தேர்தல்கள் குறுக்கிட்டதால் விலை உயர்வை அறிவிக்காமல் இருந்து வந்தது மத்திய அரசு. ஆனால் தற்போது நிலைமை மேலும் மோசமாகி வருவதால், பெட்ரோலியப் பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்தியாக வேண்டும் என மத்திய அரசை எண்ணை நிறுவனங்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில் இன்று பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பான மத்திய அமைச்சரவைக் குழு கூடி ஆலோசித்தது. இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாயும் உயர்த்த மத்திய அரசுக்கு பெட்ரோலியத்துரை பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.
இந்த விலை உயர்வு குறித்து முடிவு செய்ய அடுத்த வாரத்தில் அமைச்சரவை கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் விலை விலை உயர்வுக்கு ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும்.