யுஎஸ்-இன்டல் திறனறிவு போட்டியில் 7 இந்திய மாணவர்கள்
நியூயார்க்: இன்டல் நிறுவனத்தின் 2008ம் ஆண்டுக்கான அறிவியல் திறனறிவுப் போட்டியின் இறுதிச் சுற்றில், அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் 7 பேர் இடம் பிடித்துள்ளனர். மொத்தம் 40 மாணவர்கள் இறுதிச் சுற்றில் இடம் பெற்றுள்ளனர்.
ஜூனியர் நோபல் பரிசு என அழைக்கப்படும் இந்த அறிவியல் திறனறிவுப் போட்டி அமெரிக்காவின் மிகப் பழமையான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க உயர்நிலைப்பள்ளி மாணவர்களால் இது பெருமைக்குரியதாகவும் கருதப்படுகிறது.
இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தற்போது 40 பேர் முன்னேறியுள்ளனர். அவர்களில் 7 பேர் அமெரிக்க இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிச் சுற்று மார்ச் மாதத்தில் ஒரு வார காலம் வாஷிங்டன் நகரில் நடைபெறும். இதில் முதலிடத்தைப் பிடிக்கும் மாணவருக்கு, இன்டல் நிறுவனம் 1 லட்சம் டாலர் கல்வி-ஆராய்ச்சி உதவித் தொகையை வழங்கும். மேலும் இறுதிச் சுற்றில் இடம் பெற்றுள்ள 40 பேருக்கும் தலா 5,000 டாலர் உதவித் தொகை மற்றும் ஒரு லேப்டாப் பரிசாக அளிக்கப்படும்.
அமெரிக்காவின் 19 மாநிலங்களைச் ேசர்ந்த 35 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அதிகபட்சமாக நியூயார்க்கிலிருந்து 15 பேர் இடம் பெற்றுள்ளனர். பென்சில்வேனியாவிலிருந்து 4 பேரும், டெக்சாஸிலிருந்து 3 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய மாணவர்கள் விவரம்:
அவந்தி ராகவன் (ஓர்லான்டோ-புளோரிடா), ஷ்ராவனி மிக்கிலினேனி (ப்ளூம்பீல்ட்-மிச்சிகன்), ஹம்சா ஸ்ரீதர் (கிங்ஸ்பார்க்-நியூயார்க்), அசோக் சந்திரன் (நெஸ்கான்சட்-நியூயார்க்), ஷிவானி சுட் (துர்ஹாம்-நார்த் கரோலினா), இஷா ஜெயின் (பெத்லகேம்-பென்சில்வேனியா), வினய் வெங்கடேஷ் ராமஷேஷையா (போர்ட் ஒர்த்-டெக்ஸாஸ்).