இலங்கையில் வன்முறை தொடர்ந்தால் நிதியுதவிகள் நிறுத்தப்படும்: ஜப்பான்
கொழும்பு: இலங்கையில் வன்முறைகள் தொடர்ந்தால் இலங்கைக்கு ஐப்பான் அளித்து வரும் அனைத்து நிதியுதவிகளும் நிறுத்தப்படும் என்று இலங்கைக்கான ஐப்பானிய சிறப்பு அமைதித் தூதர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சர்வதேச செய்தியாளர்களிடயை அவர் பேசுகையில், ஜப்பான் தொடர்ந்து தனது நிதியுதவியை வழங்க வேண்டும் என்று இலங்கை அரசு விரும்புகிறது.
ஆனால், இலங்கை அரசு தனது ராணுவ நடவடிக்கைகளை உக்கிரமாக்கும் பட்சத்தில், ஜப்பான் தனது நிதி வழங்கும் கொள்கையை மறு பரிசீலனை செய்ய நேரிடும்.
இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும், அமைதிக்கான பாதையை ஏற்காதவரை, எத்தனை கோரிக்கைகளை உலக நாடுகள் விடுத்தாலும் அவற்றில் அர்த்தம் ஏதும் இருக்கப் போவதில்லை. அத்தகைய விண்ணப்பங்களை, அவை கருத்தில் எடுக்கப் போவதுமில்லை.
அமைதிக்கான முயற்சிகள் கடுமையானவை என்பதுடன், நீண்டகாலம் எடுக்கக் கூடியவை. இன்னும் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து அந்த நாட்டின் சமாதானத்திற்காக உழைக்க நேரிட்டாலும், ஜப்பான் அதற்குத் தயாராகவே இருக்கின்றது.
பல்வேறு விதமான வழிமுறைகளையும் கையாண்டு, வெவ்வேறு பாதைகளையும் பரீட்சித்துப் பார்த்து, நீண்டகாலத் திட்டமிடளில்தான் நிரந்தர சமாதானம் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கு ஜப்பான் தொடர்ந்து பாடுபட தயாராக உள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு தடை இல்லை:
விடுதலைப் புலிகளை உலக நாடுகள் பல தடைசெய்துள்ள போதிலும், ஜப்பான் அப்படியான தடையைக் கொண்டுவராது. விடுதலைப் புலிகள் மீது தடையைக் கொண்டுவருவதன் மூலம், அவர்களுடனான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் குழப்பமடையும்.
அவர்களைப் பயங்கரவாதிகள் என்று அழைப்பதன் மூலம், சமாதான முயற்சிகளுக்கு அவர்கள் தங்களது நேரடிப் பங்களிப்பை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.
எனவே, தொடர்ந்து இரு தரப்பையும் சமாதானத்தை நோக்கிய முயற்சிகளுக்கு அழைத்துவர ஜப்பான் முயற்சி செய்யத் தயாராக இருக்கின்றது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications