தமிழில் கையெழுத்து அதிகாரிகளுக்கு டிஜிபி எச்சரிக்கை!
மதுரை: அலுவலக ஆவணங்களில் தமிழில் கையெழுத்திடாத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு துறை அதிகாரிகள் அலுவலகம் சம்பந்தப்பட்ட கோப்புகளில் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதுகுறித்து அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்தபோது போலீஸ் துறையில் உள்ள பல அதிகாரிகள் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டது தெரியவந்தது.
வட மாநில அதிகாரிகள் பலர் தமிழில் கையெழுத்திட்டு வருகிறார்கள். ஆனால் தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலர் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு வருவது தெரியவந்தது.
இது குறித்த தகவல்களை டி.ஜி.பி. ராஜேந்திரன் கவனத்திற்கு தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக டி.ஜி.பி. ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ஒரு சில மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர்கள் அரசாணையை மீறி ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு வருகிறீர்கள். இனி வரும் காலத்தில் தமிழில் மட்டுமே கையெத்திட வேண்டும். தமிழில் கையெழுத்திட தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபப்டும் என தெரிவித்துள்ளார்.