திருச்சி பெண் ஜெனிட்டாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

திருச்சி: அமெரிக்காவில் ஓடும் காரிலிருந்து கணவன் மற்றும் குடும்பத்தாரால் தள்ளி விடப்பட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்டு தமிழகம் திரும்பிய திருச்சி பெண் ஜெனிட்டாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
திருச்சி துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் செபாஸ்டியன். அவரது மகள் ஸ்மாலின் ஜெனிட்டா (24). இவருக்கும் அமெரிக்காவில் என்ஜீனியராக பணியாற்றும் திருச்சி காட்டூரைச் சேர்ந்த கிறிஸ்டி டேனியல் (31) என்பவருக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது.
கண்கள் நிறையக் கனவுகளுடன், மனசு நிறைய எதிர்பார்ப்புகளுடன் கணவருடன் குடும்பம் நடத்த ஜெனிட்டா 2007ல் அமெரிக்கா சென்றார்.
ஆனால் போன இடத்தில் சந்தோஷ வாழ்க்கை ஜெனிட்டாவுக்குக் கிடைக்கவில்லை. கணவர் மற்றும் அவரது தாயார், சகோதரி ஆகியோர் சேர்ந்து செய்த கொடுமையில் சிக்கி, அவதிப்பட்டார்.
கொடுமையின் உச்சமாக, ஓடும் காரிலிருந்து ஜெனிட்டாவைக் கீழே தள்ளி கொல்லவும் முயற்சித்தது கிறிஸ்டியின் குடும்பம்.
கர்ப்பிணியமான ஜெனிட்டா, கடவுள் புண்ணியத்தால் காயத்தோடு உயிர் தப்பினார். முதுகுத் தண்டவடத்தில் ஏற்பட்ட பாதிப்பால் படுத்த படுக்கையாக முடங்கிப் போன நிலையில் ஜெனிட்டாவை சென்னைக்கு அழைத்து வந்தார் அவரது தந்தை செபாஸ்டியன். பின்னர் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டார்.
திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வீடு திரும்பினார். வீட்டில் தினசரி பிசியோதெரபி சிகிச்சையை எடுத்து வந்தார் ஜெனிட்டா.
இந்த நிலையில், நேற்று ஜெனிட்டா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இது சிசேரியன் என உறவினர்கள் தெரிவித்தனர். ஜெனிட்டாவும், குழந்தையும் நலமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications