தீவிரவாத அரசு திமுக- ராம.கோபாலன் தாக்குதல்
கடையநல்லூர்: தீவிரவாதிகள் அனைவரும் திமுக தான் தங்களுடைய அரசு என்று கூறி வருகின்றனர் என இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் ராஜபாண்டி வீட்டுக்கு சென்று ராம.கோபாலன் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நெல்லை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 10 கொலைகள் நடந்துள்ளன. ஆனால் இதுவரை கொலையாளிகளை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இந்த அரசு இந்துக்களுக்கு எதிரான அரசாகும்.
தமிழக எல்லையான செங்கோட்டையில் இருந்து கேரளா செல்லும் பாதையில் கட்டப்பட்டு வரும் மசூதி தான் தீவிரவாதிகளின் புகலிடமாகவும், ஆயுதங்களை பதுக்கி வைக்கும் கிடங்காகவும் உள்ளது. இதனை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தமிழகம் வருவதை கண்டனம் செய்தனர். ஆனால் குஜராத்தில் நரேந்திரமோடி ஆட்சியில் முஸ்லீம் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை என கூறுவது உண்மையில்லை.
தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள இந்து சமுதாயத்தினர் நிம்மதியாக வாழ முடியவில்லை. விடுதலைப் புலிகள், தீவிரவாதிகள் அனைவரும் திமுகவை தங்களுடைய அரசு என்று கூறிவருகின்றனர்.
இந்துக்கள் ஜாதி, மதம், அரசியல் ஆகியவற்றை மறந்து ஒற்றுமையாக வாழ்ந்தால் எதையும் சாதிக்கலாம். தமிழக அரசு போலீசாரின் கைகளை கட்டி போட்டுள்ளது.
எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் கடையநல்லூர், தென்காசியில் பந்த், கடையடைப்பு, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதை டிவி பத்திரிக்கைகள் மூலம் அறிந்து கொண்டேன். முடிவில் தர்மம் வெல்லும் என்றார் ராம.கோபாலன்.