மதுரை மாநில மாநாடு: தொண்டர்களுக்கு சரத் அழைப்பு
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாட்டுக்கு அலை கடலென தொண்டர்கள் மதுரைக்குத் திரண்டு வர வேண்டும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாடு, மதுரையில் பிப்ரவரி 10ம் தேதி நடைபெறுகிறது.
இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மதுரை அருகே விரகனூரில் ரிங் ரோடு பகுதியில் இதற்காக பிரமாண்டமான மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 10ம் தேதி தொடங்கும் மாநாட்டின் தொடக்கமாக கட்சித் தலைவர் சரத்குமார் கட்சிக் கொடியேற்றி வைக்கிறார்.
அதன் பின்னர் கவியரங்கம், கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சரத்குமார் படப் பாடல்கள் பாடப்படவுள்ளன.
முதல் நாள் மாநாட்டின்போது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சரத் கட்சியில் இணையும் நிகழ்ச்சி இடம் பெறுகிறது.
சில முக்கிய கட்சிகளின் முக்கிய தலைவர்களும் இந்த மாநாட்டின்போது தனது கட்சியில் இணையவுள்ளதாக சரத் எதிர்பார்க்கிறார்.
மாநாட்டுக்கு கட்சித் தொண்டர்கள் அலை கடலென திரண்டு வர வேண்டும் என சரத்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.