ரோந்து சென்ற போலீசாரிடம் வாக்கி டாக்கி திருட்டு
தூத்துக்குடி: ரோந்து சென்ற போலீசாரிடமே வாக்கி டாக்கி திருடப்பட்டுள்ளது.
திருட்டு, குற்றங்கள் நடப்பதைத் தடுக்க போலீசார் ரோந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் தூத்துக்குடி, பாலவினாயகர் கோவில் தெருவில் ஏட்டு அந்தோணி மற்றும் போலீஸ்காரர் துரைப்பாண்டி ஆகியோர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வழியில் இவர்கள் தூக்கம் ேபாட்டதாகத் தெரிகிறது. இந் நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் இவர்கள் விழித்துப் பார்த்தபோது அவர்கள் வைத்திருந்த வாக்கி டாக்கியைக் காணவில்லை.
இது குறித்து ஏட்டு அந்தோணி நிக்கோலஸ் தூத்துக்குடி மத்திய பாகம் போலீசில் புகார் செய்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்குப் பதிவு செய்து வாக்கி டாக்கியை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார். காணாமல் போன வாக்கி டாக்கியின் மதிப்பு ரூ.75,000 ஆகும்.
அதன் மதிப்பைவிட முக்கியமானது போலீசாரின் வயர்லெஸ் பேச்சுக்களை அதில் ஒட்டு கேட்க முடியும் என்பது தான். இது பாதுகாப்புப் பணியில் சிக்கலை ஏற்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications