எந்த இனத்தையும் கைவிட மாட்டோம்: மலேசிய பிரதமர்
சிங்கப்பூர்: மலேசியா வளர்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு நாடு. எனவே நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள எந்த இனத்தையும் அரசு கைவிடாது என்று மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறியுள்ளார்.
மலேசிய இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார் படாவி. அவர் பேசுகையில்,
மலேசியாவின் 2வது பிரதமராக இருந்த, மறைந்த துன் அப்துல் ரஸ்ஸாக் ஹூசேன் புதிய பொருளாதாரக் கொள்கையை உருவாக்கியபோது, நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து இனத்தவரும் முக்கியம். யாரையும் அரசு கைவிடாது என்று கூறியிருந்தார். அந்த உறுதிமொழியைத்தான் எனது அரசும் கடைப்பிடித்து வருகிறது.
மலேசியாவில் வாழும் எந்த சமுதாயத்தையும் அரசு கைவிடாது, ஒதுக்காது, புறக்கணிக்காது. மலேசியாவின் வளர்ச்சியில் வம்சாவளி இந்தியர்களின் பங்கு முக்கியமானது. அவர்களின் குறைகளை, பிரச்சினைகளைத் தீர்க்க அரசு ஆர்வமாக உள்ளது என்றார் படாவி.
சமீபத்திய இனச் சிக்கல்களுக்குப் பின் இவ்வளவு தூரம் படாவி இறங்கி வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
பேச்சுவார்த்தைக்கு முன்வரும் ஹிண்ட்ராப்:
இதற்கிடையே, ஆளும் ஐக்கிய மலாய் தேசிய கழகத்தின் தலைமையிலான பாரிசான் நேஷனல் கூட்டணியுடன், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தலைவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்து உரிமைகளுக்கான நடவடிக்ைகக் குழு (ஹிண்ட்ராப்) முன்வந்துள்ளது.
கடந்த நவம்பர் 25ஆம் தேதி ஹிண்ட்ராப் அமைப்பு தலைநகர் கோலாலம்பூரில் பேரணி நடத்தியது. இதை சட்டவிரோதமாக அறிவித்த மலேசிய அரசு பல தமிழர்களைக் கைது செய்தது.
பின்னர் டிசம்பர் 13ஆம் தேதி ஹிண்ட்ராப் அமைப்பின் சட்ட ஆலோசகர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் எம்.மனோகரன், வி.கணபதிராவ், ஆர். கங்காதரன், வி. வசந்தகுமார் ஆகியோரை உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது.
அவர்கள் அனைவரும் தற்போது முகாமில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். எந்தவித விசாரணையும் இன்றி அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், அவர்களை விடுவிப்பது தொடர்பாக ஆளும் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் வைத்தியமூர்த்தி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அவர் தற்போது மலேசிய அரசின் நடவடிக்கையிலிருந்து தப்ப வெளிநாட்டில் தங்கியுள்ளார்.
வைத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசிய இந்தியர்களின் எதிர்காலம் குறித்தும், ஹிண்ட்ராப் நிர்வாகிகள் விடுதலை தொடர்பாகவும் அரசுத் தரப்புடனும், அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.