பெரியகுளம் மலையில் மகாராஷ்டிர வாலிபர் கைது - மீண்டும் நக்சலைட் வேட்டை
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் திரிந்த மகாராஷ்டிர வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அங்கு மீண்டும் நக்சலைட்டுகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட மலைப் பகுதி கிராமங்களில் சமீப காலமாக நக்சலைட் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக அங்கு நக்சலைட்டுகளை வேட்டையாடும் பணி நடந்து வருகிறது. இதில் பலர் சிக்கியுள்ளனர்.
இதையடுத்து பெரியகுளம் அருகே சிறப்பு அதிரடிப்படையினர் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது மலை கிராமங்களில் அதிரடிப்படையினர் திடீர் சோதனைகள் நடத்தி நக்சலைட் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
மகாராஷ்டிர வாலிபர் சிக்கினார்:
இந்த நிலையில், சின்னூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நிர்ஜா ஹமீத் பெய்க் என்கிற வாலிபரை (வயது 30) அக்கிராம மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர். அவருடன் வந்த சிலர் தப்பி ஓடி விட்டனர்.
பெய்க்கிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் வேலை தேடி அவர் தமிழகத்திற்கு வந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் வேறு தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை. தன்னுடன் வந்த நபர்கள் குறித்தும் அவர் எதையும் தெரிவிக்க மறுத்து விட்டார். எனவே அவர் தீவிரவாதியாக இருக்கக் கூடும் அல்லது நக்சலைட்டாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து மகாராஷ்டிர போலீஸை, தமிழக போலீஸ் தொடர்பு கொண்டு பெய்க் குறித்த தகவல்களைக் கேட்டுள்ளது. பெய்க்கின் படத்தை இ மெயில் மூலமாக மகாராஷ்டிர காவல்துறைக்கு தமிழக போலீஸ் அனுப்பி வைத்துள்ளது.
ஏற்கனவே டிசம்பர் 19ம் தேதி வருசநாடு மலைப் பகுதியில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பயங்கர நக்சலைட் உள்பட 5 மாவோ தீவிராதிகளைப் போலீஸார் பிடித்தனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் மகாராஷ்டிர வாலிபர் சிக்கியுள்ளதால் போலீஸாருக்கு கவலை அதிகரித்துள்ளது. கிராம மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
எனவே மலைப்பகுதிகளில் மேலும் பல வெளிமாநிலத்தவர்கள் ஊடுறுவியிருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இதையடுத்து பெரியகுளம் வனப்பகுதி மலை கிராமங்களான அகமலை, சின்னூர், பெரியூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடிப்படையினர் மீண்டும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications