பஹ்ரைன் அருகே கவிழ்ந்த இந்திய கப்பல்-ஊழியர்கள் மீட்பு
மனாமா: பஹ்ரைன் அருகே நடுக்கடலில் இந்தியக் கப்பல் கவிழ்ந்தது. அதிலிருந்த 17 ஊழியர்களையும் மாலுமிகளையும் அந் நாட்டு கடேலாரக் காவல்படை மீட்டது.
குஜராத்தைச் சேர்ந்த அந்த கப்பலான சித்நாத் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து அரிசி ஏற்றிக் கொண்டு இராக்குக்கு சென்று கொண்டிருந்தது. இந் நிலையில் நேற்று இந்தக் கடல் பகுதியில் ராட்சத அலைகள் எழுந்தன. இதில் அந்தக் கப்பல் தடுமாறியது.
உதவி கோரி எஸ்.ஓ.எஸ். அவரச சமிஞையை அனுப்பிய அந்தக் கப்பல் சிறிது நேரத்தில் கவிழ்ந்தது.
கப்பலில் இருந்து வந்த அவசர சிக்னலை வைத்து பஹ்ரைன் நாட்டு கடலோரக் காவல்படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்தனர். கடலில் தத்தளித்த குஜராத்தைச் சேர்ந்த 17 கப்பல் ஊழியர்களையும் மீட்டு மனாமா நகருக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை தரப்பட்டது. இவர்களை இந்தியாவுக்கு அனுப்ப இந்திய தூதரகம் முயன்று வருகிறது.
இந்த 17 பேருக்கும் பஹ்ரைன் இந்திய சமுதாயத்தினரின் உதவியோடு இயங்கும் மீட்பு நிதி மூலம் உணவு மற்றும் உடைகள் தரப்பட்டுள்ளன.