ஹோட்டல் இடிந்து 11 பேர் பலி - 40 பேர் காயம்
அகமதாபாத்: அகமதாபாத்தில் இன்று காலை ஹோட்டல் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியானார்கள். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
அகமதாபாத், கலுப்பூர் ரயில்வே நிலையம் எதிரில் உள்ள சாகுந்த் என்ற நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இங்கு ஏராளமானோர் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் காலை 9 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. சீட்டுக்கட்டு போல கட்டடம் சரிந்து விழுந்தது. இதில் ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்தவுடன் தீயணைப்புப் படையினரும், போலீசாரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதுவரை 11 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 40 பேர் படுகாயம் அடைந்தனர். இன்னும் 50க்கும் மேற்பட்டவர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி விரைவாக நடந்து வருகிறது.
கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் ரயில்வே தேர்வு எழுத வந்த மாணவர்கள் ஆவர்.