பலவீனமடையும் விடுதலைப் புலிகள்: இலங்கை நாளிதழ்
கொழும்பு: அனுபவம் வாய்ந்த போர் வீரர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் விடுதலைப் புலிகள் பலவீனமடைந்து வருகின்றனர் என்று கொழும்பிலிருந்து வெளியான பத்திரிகைச்செய்தி தெரிவிக்கிறது. இருப்பினும் இதை புலிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
கொழும்பிலிருந்து வெளியாதும் ஐலண்ட் நாளிதழில் வெளியாகியுள்ள அந்த செய்தியில், விடுதலைப்புலிகளிடம் தற்போது 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் கொரில்லாப் படையினர் உள்ளனர். இருப்பினும் இவர்களில் வெகு சிலரே போர் தாக்குதல் திறன் படைத்தவர்கள்.
கடற் புலிகளின் எண்ணிக்கை 1500 ஆகும். மற்றவர்கள் பெரும்பாலும் புதிதாக படைக்கு வந்தவர்கள். இன்னும் போர் முனையை எட்டிப் பார்க்காதவர்கள்.
விடுதலைப் புலிகளுக்கு முன்பு போல அதி நவீன ஆயுதங்கள் வருவது நின்று விட்டது. எனவே உள்ளூரில் தயாரிக்கப்படும் ஆயுதங்களைத்தான் அவர்கள் அதிகம் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் இந்த ஆயுதங்களால் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் தாக்குதல் நடத்த முடியாது.
விடுதலைப் புலிகள் வசம் இருந்த 7 கப்பல்கள் மூழ்கி விட்டன. 3 விமானங்களும் சேதமடைந்து விட்டன. முக்கியமான 25 தளபதிகள் கொல்லப்பட்டு விட்டனர் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த செய்தியை நிராகரித்துள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆலோசகர்களில் ஒருவரான கே.பாலகுமாரன், விடுதலைப் புலிகளின் வீரர் பலம் குறித்த முழு விவரமும் விரைவில் வெளியிடப்படும் என்றார்.