தேமுதிக நிர்வாகி மீது திமுகவினர் தாக்குதல்
காரைக்கால்: புதுச்சேரி மாநில தேமுதிக உதவி செயலாளர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார்.
புதுச்சேரி மாநில தேமுதிக உதவிச் செயலாளராக இருப்பவர் ஆசனா.
இன்று அதிகாலை 1.30 மணியளில் ஆசனாவின் அலுவலகம் மீது ஒரு கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் ஆசனாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.
இந்த தாக்குதல் குறித்து ஆசனாவின் ஆதரவாளரான சிவா என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் சீனிவாசன் உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே சீனிவாசனும், ஆசனா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸில் புகார் கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் ஒரு வாரத்திற்கு தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
தாக்குதலுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இருப்பினும் அரசியல் முன்விரோதம் காரணமாகவே இந்த மோதல் நடந்துள்ளதாக கருதப்படுகிறது.
காரைக்கால் தொகுதியில் கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் ஏ.எம்.எச். நஜீம் போட்டியிட்டார். தேர்தலில் நஜீம், ஆசனாவை விட 33 ஓட்டுக்கள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதன் காரணமாக திமுகவினருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே பூசல் நிலவி வந்தது. எனவே திமுகவினர்தான் இன்று நடந்த தாக்குதலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications