நடத்தையில் சந்தேகம்: மகளை கொலை செய்த தந்தை
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் அருகே பெற்ற மகளின் நடத்தையில் சந்தேகம் அடைந்த தந்தை ஆத்திரத்தில் மகளை வெட்டிக் கொலை செய்து விட்டார்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஜகாங்கீர் மகன் ரீபாய். இவருக்கும் கல்லிடைகுறிச்சி மேல்முக நாடார் தெருவை சேர்ந்த திவான் முகமது மகன் செய்யது அலி பாத்திமாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து 3 வயதில் மகன் உள்ளான்.
துபாயில் வேலை செய்து வந்த ரீபாய் கடந்த 15 நாட்களுக்கு முன் ஊர் திரும்பினார். அப்போது ரீபாய் - பாத்திமா தம்பதிகளுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதால், பாத்திமா அம்பாசமுத்திரத்தில் உள்ள ஜமாத்தில் புகார் செய்தார்.
ஜமாத்தார் தம்பதியினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பாத்திமா, கணவருடன் வாழ தனக்கு விருப்பம் இல்லை. நான் எனது தந்தையுடன் செல்கிறேன் எனக் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட ஜமாத்தார் பாத்திமாவை அவரது தந்தை தீவான் முகமதுவுடன் அனுப்பி வைத்தனர்.
கணவரை பிரிந்து மகனுடன் வந்த மகளை தீவான் முகம்மது, தான் குடியிருக்கும் பகுதியிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி குடியிருக்க வைத்தார். இந்நிலையில் மகனுடன் வாழ்ந்து வந்த பாத்திமா கடந்த ஒரு வாரத்திற்கு முன் திடீரென்று வீட்டை விட்டு காணாமல் போய்விட்டார்.
இந்நிலையில் செய்யது அலி பாத்திமா நேற்றிரவு வீட்டிற்கு வந்துள்ளார். மகளிடம் தீவான் முகம்மது, எங்கு சென்று ஊர் சுற்றினாய் என்று கேட்டுள்ளார். இதனால் தந்தை-மகளுக்கிடையை கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அருகில் இருந்தவர்கள் வந்து சமாதானம் செய்துள்ளனர்.
வீட்டிற்கு வந்த அவர் இரவு முழுவதும் தூங்கமலேயே விழித்திருந்தார். அப்போது அவரிடம் மனைவி ஷர்பினிஷா பேகம் எதுவானாலும் காலையில் பார்த்து கொள்ளலாம், இப்போது போய் தூங்குங்கள் என்று கூறினார்.
மகளின் நடத்தை பிடிக்காத தீவான் முகம்மது ஆத்திரம் தாங்காமல், காலையில் மனைவியுடன் மகள் வீட்டுக்கு சென்றார். மீண்டும் வாக்குவாதம் தொடரவே ஆத்திரத்தில் தீவான் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பெற்ற மகளை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
பெற்ற மகளையே வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications