இலங்கை சிறையில் நல்ல கவனிப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள்
ராமேஸ்வரம்: இலங்கை அரசின் பிடியிலிருந்து மீண்டு ராமேஸ்வரம் திரும்பியுள்ள 12 மீனவர்களும், தங்களை, இலங்கை போலீஸார் சித்திரவதையோ, கொடுமையோ செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாலு, அந்தோணி, சேவியர் உள்ளிட்ட 12 மீனவர்கள், ஜனவரி 29ம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் காங்கேசன் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 12 பேரும், தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக 31ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை சிறையிலிருந்து மீண்டு சொந்த ஊர் திரும்பியுள்ள 12 பேரும் தாங்கள் இலங்கையில் நன்றாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
தங்களது இலங்கை அனுபவத்தை மாவட்ட அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் எடுத்துரைத்தனர். அவர்கள் கூறுகையில், எங்களை போலீஸார் எந்தவித சித்திரவதையும் செய்யவில்லை. சிறையில் எங்களுக்கு சரியான முறையில் சாப்பாடு போடப்பட்டது. 3 வேளை சாப்பாடு போட்டனர்.
யாழ்ப்பாணம் சிறையில் எங்களை அடைத்தனர். அங்கு எங்களை நல்லபடியாக கவனித்துக் கொண்டனர்.
நாங்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டனர். அதற்குப் பதில் ரூ. 4500 பணம் கொடுத்தனர். அதில் 500 ரூபாயை நாங்கள் செலவழித்து விட்டோம். மீதப் பணத்தை இந்திய நாணயமாக மாற்றக் கொடுத்தோம் என்றனர்.