தமிழகத்தில் முதலீடு: தென் கொரியாவுக்கு கருணாநிதி அழைப்பு

Subscribe to Oneindia Tamil


சென்னை: தமிழகத்தில் பெருமளவில் முதலீடு செய்ய தென் கொரிய நிறுவனங்கள் முன்வர வேண்டும். தங்களது தொழில் அனுபவங்களை தமிழகத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் 2வது உற்பத்திப் பிரிவு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. முதல்வர் கருணாநிதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2வது பிரிவை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தென் கொரியா, உலகிலேயே சிறந்த நிலக்கரியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ளது.

மேலும், எண்ணை உற்பத்தி, எரிவாயுக் குழாய்கள் அமைப்பது, பைபர் ஆப்டிக் கேபிள்கள், துறைமுக கட்டுமானம், விமான நிலையம், துறைமுக நிர்வாகம் ஆகியவற்றிலும் தென் கொரியா சிறந்து விளங்குகிறது.

தென் கொரியா தனது ஆழ்ந்த அனுபவத்தை தமிழகத்துடனும் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும். இங்கு அதிக அளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். ஏற்கனவே பெரிய அளவில் தென் கொரியா, தமிழகத்தில் முதலீடு செய்துள்ளது. அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதையும் நான் புரிந்து கொண்டுள்ளேன்.

ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் துறைகளில் தமிழகம் தலை சிறந்து விளங்குகிறது.

தமிழகத்தை நோக்கி பல்வேறு முதலீடுகள் வருகின்றன. இதற்குக் காரணம், இங்கு தொழில் தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதுதான். மாநில அரசு தனது கொள்கையில் வெளிப்படையாக உள்ளது. விரைந்து முடிவெடுப்பதால் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தமிழகத்தில் திறமையான தொழிலாளர்கள் பெருமளவில் உள்ளனர். நன்கு பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு இங்கு பஞ்சம் இல்லை.

ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளுக்கு தரப்படும் அதே அளவிலான முக்கியத்துவம், ஜவுளி, ஆயத்த ஆடைத் துறை, தோல் தொழில் உள்ளிட்ட பாரம்பரியத் தொழில்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும் என்றார் முதல்வர்.

நிகழ்ச்சியில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி பேசுகையில், தமிழகத்தை ஆட்டோமொபைல் துறையில் மிகப் பெரிய மாநிலமாக உருவாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உலகப் புகழ் பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சில விரைவில் தமிழகத்தில் உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளன. விரைவில் இதுதொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

கடந்த 20 மாதங்களில் உலகப் புகழ் பெற்ற 12 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ. 15 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 1.30 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

ஹூண்டாயின் 2வது பிரிவு:

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஏற்கனவே சென்னையில் ஒரு உற்பத்திப் பிரிவு உள்ளது. தற்போது ஸ்ரீபெரும்புதூரில் தனது 2வது பிரிவை தொடங்கியுள்ளது.

ரூ. 4000 கோடி முதலீட்டில் இந்த 2வது உற்பத்திப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவையும் சேர்த்து, இந்தியாவில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் உற்பத்தி ஆண்டுக்கு 6 லட்சம் கார்கள் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.

புதிய பிரிவில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ10 மாடல் கார்கள் தயாரிக்கப்படும்.

தற்போது 3 லட்சம் கார்கள் என்ற உற்பத்தி இலக்குடன் தொடங்கப்பட்டுள்ள இந்த பிரிவு, ஆண்டு இறுதிக்குள் 5.3 லட்சம் கார்கள் என்ற எண்ணிக்கையை எட்ட ஹூண்டாய் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளதாம்.

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 34 வகையான கார்களை விற்பனையில் ஈடுபடுத்தியுள்ளது.

தென் கொரியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், 1998ம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்தது.

3 ஆண்டுகளில் சின்னக் கார்!

இதற்கிடையே, இன்னும் 3 ஆண்டுகளில் சிறிய ரக காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளாக ஹூண்டாய் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு முதுநிலை துணைத் தலைவர் அரவிந்த் சக்சேனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது உள்ள சான்ட்ரோ காரை விட இது சிறிதாக இருக்கும். இன்னும் 3 ஆண்டுகளில் இந்த புதிய கார் அறிமுகப்படுத்தப்படும்.

இதுதொடர்பான ஆய்வுப் பணிகள் நடந்து கொண்டுள்ளன. 3 ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வரும்.

கார் சிறிதாக இருந்தாலும் கூட, காரின் உட்புறம், சான்ட்ரோ காரை விட பெரிதாக இருக்கும். அனைத்து வகையான பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும் என்றார் அவர்.

ஏற்கனவே டாடா தனது சிறிய ரக காரான டாடா நானோவை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

அதேபோல, ரெனால்ட், நிஸ்ஸான் மோட்டார் ஆகியவையும் குறைந்த விலை கார்களை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன. டொயோட்டோ, வாக்ஸ்வோகன் ஆகியவையும் குறைந்த விலை கார்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் ஹூண்டாயும் சிறிய ரக காரை களத்தில் இறக்கப் போவதாக அறிவித்துள்ளது இந்திய கார் சந்தையில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+