போனில் பேசியதால் ஆத்திரம் - மாணவன் கையைக் கடித்த ஆசிரியர்
கோவை: பள்ளி விடுதியில் மாணவன் போனில் பேசியதால் ஆத்திரமடைந்த ஆசிரியர், அந்த மாணவனின் கையைக் கடித்து விட்டார். கடிபட்ட மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியின் விடுதியில்தான் இந்த அலங்கோலம் நடந்துள்ளது.
இந்த விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் வசதிக்காக தொலைபேசி வசதி உள்ளது. ஆனால் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தொலைபேசியை பயன்படுத்த அனுமதி இல்லை. அப்போது படிப்பு நேரம் என்பதால் தொலைபேசியை உபயோகிக்க மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை.
இந்த நிலையில், நேற்று படிப்பு நேரத்தின்போது தொலைபேசி மணி ஒலித்தது. இதைப் பார்த்த ஒரு ஆசிரியர், 12வது வகுப்பு படிக்கும் பழனிச்சாமி என்பவரின் மகன் சதீஷை அழைத்து போனை எடுக்குமாறு கூறினார்.
சதீஷும் போனை எடுத்துள்ளார். அந்த நேரம் பார்த்து விடுதி வார்டன் அங்கு வந்துள்ளார். சதீஷ் போனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து கோபமடைந்த அவர் மாணவனின் கையைப் பிடித்து ஓங்கிக் கடித்துள்ளார்.
ஆனால் பள்ளி நிர்வாகம் வேறு மாதிரியாக இதை கூறுகிறது. ஆசிரியரிடம் மாணவன் சதீஷ் தவறுதலாக நடந்து கொண்டதாகவும், அதனால் அவனை சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளதாகவும், அவனது டிசியை வாங்கிச் செல்லுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால் இந்தப் புகாரை மறுத்துள்ள பழனிச்சாமி, இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸில் புகார் செய்துள்ளார். அதில் தனது மகனை விடுதி வார்டன் கடித்துள்ளார் என்றும், கைக் காயத்தையும், அதற்கு எடுத்துக் கொண்ட சிகிச்சையையும் அவர் புகாரில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்மேகம் கூறுகையில், இது உண்மையில் நடந்திருந்தால் அது தவறானது, கடும் கண்டனத்துக்குரியது. இந்த தண்டனை மிகக் கொடூரமானது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட ஆசிரியர், தான் மாணவனைக் கடித்ததாக விசாரணையின்போது ஒப்புக் கொண்டுள்ளாராம். ஆனால் பள்ளி நிர்வாகம்தான் பள்ளியின் பெயர் கெட்டு விடுமே என்பதற்காக இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்று வருகிறதாம்.
இருப்பினும் விவாகரம் சூடு பிடித்திருப்பதால் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.