காட்டு யானைகள் அட்டகாசம் - 50 தென்னை மரங்கள் நாசம்
செங்கோட்டை:செங்கோட்டை அருகே காட்டு யானைகள் புகுந்ததால் 50 தென்னை மரங்கள் நாசமானது.
செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது பூலாங்குடியிருப்பு. இங்கு ஆயிரக்கனக்கான ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை, மா, பலா, வாழை ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன.
செங்கோட்டையை சேர்ந்த யாகூப் அலி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு இங்கு உள்ளது. இதில் காவலாளியாக சங்கரலிங்க நாடார் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை இவர் வழக்கம் போல் தோப்புக்கு சென்றார். அப்போது 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் குருத்துகள் பிடுங்கி எறியப்பட்டு நாசமாகி கிடந்தன. தோப்பில் யானையின் காலடி தடங்கள் கிடந்தன. இரவில் யானை கூட்டம் தோப்புக்குள் புகுந்து தென்னை மரங்களை நாசம் செய்தது தெரிய வந்தது.
இது குறித்து யாகூப் அலி வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதி விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.