புலிகளை விரட்டியடிப்போம்: ராஜபக்சே

இலங்கையில் இன்று 60வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொழும்பு காலே மைதானத்தில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது ராஜபக்சே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், இலங்கையின் வட பகுதியை தீவிரவாதத்தின் பிடியிலிருந்து மீட்போம். மேலும் அங்கு வசிக்கும் மக்களுக்கு அரசியல் தீர்வும், அரசியல் சுதந்திரமும் கிடைக்க வழி செய்வோம்.
இலங்கையை இன்று இரண்டு சவால்கள் எதிர்கொண்டுள்ளன. நாட்டின் வளர்ச்சி மற்றும் தீவிரவாதத்தை ஒடுக்குவது ஆகிய அந்த இரு சவால்களையும் நாங்கள் வெற்றிகரமாக சந்தித்து சமாளித்து வெற்றி பெறுவோம்.
விடுதலைப் புலிகள் வசம் இருந்த கிழக்குப் பகுதியின் பல பகுதிகள் மீட்கப்பட்டு விட்டன. வடக்கில் உள்ள இரு மாவட்டங்களில் மட்டும்தான் தற்போது விடுதலைப் புலிகள் உள்ளனர்.
கடந்த இரு ஆண்டுகளில் புலிகளை வெகுவாக ஒடுக்கியுள்ளோம். நமது படைகள், பல வெற்றிகளை குவித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வெற்றிகளை நமது படைகள் கண்டு வருகின்றன.
இனப் பிரச்சினைக்கு காணப்படும் தீர்வு நடைமுறைக்கு சாத்தியமானாக இருக்க வேண்டும். சோதனை முறையிலான தீர்வினால் எந்தப் பலனும் இல்லை. அதை ஏற்கவும் முடியாது.
இதுவரை ஆயிரக்கணக்கோரின் ரத்தங்கள் சிந்தி விட்டது.இனிமேலும், பரீட்சார்த்த முயற்சிகள் பலன் அளிக்காது. எனவேதான் இதுவரை சந்தித்த அனுபவங்களின் அடிப்படையில் அமைதித் தீர்வுக்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அமைதித் தீர்வு தொடர்பாக அரபு நாடுகள், புத்த மத நாடுகளுடன் இலங்கை நல்லுறவை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும். மேற்கத்திய நாடுகளுடனும் உண்மையான உறவு இலங்கைக்கு உள்ளது என்றார் அவர்.
முன்னதாக ராணுவ அணிவகுப்பு நடந்தது. அதை ராஜபக்சே பார்வையிட்டார்.
கொழும்பிலும், தென் பகுதியிலும் அடுத்தடுத்து குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்து வந்த நிலையில் கொழும்பில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications