திருச்சி அருகே நடந்த ஜல்லிக்கட்டுகளில் 95 பேர் காயம்
திருச்சி: திருச்சி அருகே 3 கிராமங்களில் நடந்த ஜல்லிக்கட்டுகளில் 95 பேர் காயமடைந்தனர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடை தமிழக அரசின் தீவிர முயற்சியால் நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் உள்ள மஞ்சம்பட்டி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 30 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதே போல் லால்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 30 வாலிபர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அம்மாவட்டத்தின் மற்றொரு கிராமமான சின்னசுரியூர் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 35 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் அதிக காயம் அடைந்த சிலர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.