குழப்பம் உருவாக்க வந்த ஜெ: கருணாநிதி தாக்கு
சென்னை: குழப்பத்தையும், பிரச்சினையையும் உருவாக்கும் நோக்கத்துடனேயே ஜெயலலிதா திட்டமிட்டு சட்டசபைக்கு வந்தார் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு முதல்வர் அளித்துள்ள பேட்டி:
சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளன்று ஜெயலலிதா வந்து, பேராசிரியர் அன்பழகன் போன்ற உயர்ந்த பண்பாளர்கள் பலரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேச தொடங்கினார்.
என்ன நடந்தது என்பது தொலைக்காட்சி கேமராக்களில் பதிவாகி உள்ளது. ஜெயலலிதாவின் இப்படிப்பட்ட ஆத்திரமூட்டும் பேச்சுக்குப் பிறகும் அன்பழகன் குற்றச்சாட்டுக்கு மட்டுமே பதில் அளித்தார்.
அதிமுக உறுப்பினர்கள்தான் சபாநாயகரின் இருக்கையை நோக்கி ஓடி வந்தனர். ஒருவாரம் நடந்த இந்த கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களில் ஆட்சேபனை தெரிவித்தபோது பல நேரங்களில் நானே தலையிட்டு ஆளும் கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்களின் சில பகுதிகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
அத்தகைய பகுதிகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கூட்டத் தொடர் பிரச்சினையின்றி நடந்தது.
குழப்பத்தையும், பிரச்சினையையும் உருவாக்கும் நோக்கத்துடனேயே ஜெயலலிதா திட்டமிட்டு சட்டசபைக்கு வந்தார்.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதுதான் விவாதம் நடந்தது. இப்படிப்பட்ட தீர்மானத்தின் மீது ஒரு முன்னாள் முதல்வர் இப்படியா பேசுவது பேராசிரியர் என்று நிதியமைச்சரை அழைக்கும் சொல் மரியாதைக்குரியது. பேராசிரியர் அல்லது உதவிப் பேராசிரியர் என்று கல்விப் பணி சார்ந்த அடைமொழியாக அது குறிப்பிடப்படவில்லை.
திருக்குறள் பற்றி மிகச் சிறந்த விளக்கம் அளிக்கக் கூடிய திறமையை வியந்து, அவரது புலமைக்கும், பாசத்துக்கும் மரியாதை அளிக்கும் வகையில் பேராசிரியர்' என்ற பட்டத்தை அறிஞர் அண்ணா வழங்கினார். அவரை ஜெயலலிதா அவமரியாதையாகப் பேசியது கண்டனத்துக்குரியது என்றார் கருணாநிதி.