கராச்சியில் 600 மனித வெடிகுண்டுகள்?!
கராச்சி: கராச்சி நகருக்குள் 600 மனித வெடிகுண்டுகள் ஊடுறுவியிருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கராச்சியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
பாகிஸ்தானில் கடந்த சிலமாதங்களாக பெருமளவில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தற்கொலைப் படைத் தாக்குதல் என்பது கிட்டத்தட்ட தினசரிச் சம்பவமாக மாறி விட்டது.
இந்த நிலையில் கராச்சி நகருக்குள் 600 மனித வெடிகுண்டுகள் ஊடுறுவியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அல் கொய்தா அமைப்பு இந்த மனித வெடிகுண்டு நபர்களை அனுப்பியுள்ளதாகவும் அத்தகவல் கூறுகிறது.
சமீபத்தில் பாதுகாப்பு படையினரிடம் சிக்கிய அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த காசிம் தூரி என்பவர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த தீவிரவாதிகள் முக்கிய இடங்களில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்த மனதளவில் தயார்ப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தீவிரவாதிகள் அனைவரும் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மஸ்ஜித்தில் மாணவர்களாக இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த மசூதியை தீவிரவாதிகள் முற்றுகையிட்ட போது, ராணுவம் தாக்குதல் நடத்தி அதனை மீட்டது.
பொதுத் தேர்தலுக்கு முன்பாக பாகிஸ்தானில் பெரிய அளவில் தாக்குதலை நடத்த இந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.