'தமிழர்கள் ஓட்டு': கவலையில் படாவி, டத்தோ!
கோலாலம்பூர்: ஐக்கிய மலாய் தேசிய கட்சி தலைமையிலான ஆளுங்கட்சி கூட்டணிக்கு வருகிற பொதுத் தேர்தலில் தமிழர்களின் ஓட்டுக்கள் கிடைப்பது சந்தேகம்தான் என்று பிரதமர் அப்துல்லா அகமது படாவி கவலை தெரிவித்துள்ளார். அதேபோல மலேசிய இந்திய காங்கிரஸ் தலைமையும் தமிழர்கள் வாக்குகளை இழக்க நேரிடுமோ என்ற சந்தேகத்தில் மூழ்கியுள்ளது.
மலேசியாவில் மார்ச் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அங்கு தமிழர்களிடையே ஆளுங்கட்சிக் கூட்டணி குறித்து பெரும் மனகச்சப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோலாலம்பூரில் அமைதியான முறையில் கூடிய தமிழர்களின் போராட்டத்தை அடக்குமுறையைல் மலேசிய அரசு ஒடுக்கியதே.
மலேசிய மக்கள் தொகையில் 7.8 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். அவர்களில் 90 சதவீதம் பேர் தமிழர்கள்தான். தங்களுக்கும், மலாய் இனத்தவர்களுக்கும் இடையே அரசுகள் பாரபட்சம் காட்டுவதையும கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை வழங்கப்படாததையும் மலேசிய தமிழர்கள் கோபத்துடன் சுட்டிக் காட்டுகின்றனர். இதை வெளிப்படுத்தும் வகையில்தான் கோலாலம்பூரில் அமைதிப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டத்துக்கு ஏற்பாடு செய்த இந்து உரிமைகளுக்கான நடவடிக்ைகக் குழு (ஹிண்ட்ராப்) நிர்வாகிகள் உதயக்குமார் உள்ளிட்ட 5 பேர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (நம்ம ஊர் பொடா போல) கைது செய்யப்பட்டு விசாரணையே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதெல்லாம் இந்திய வம்சாவளியினர் மனதில் பெரும் சோகத்தையும், அதிருப்தியையும், விரக்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதை உணர்ந்துதான் இந்திய வம்சவாளியினரை சமாதானப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை பிரதமர் படாவி மேற்கொள்ள ஆரம்பித்தார். முதலில் இந்துக் கோவில்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என அறிவித்தார். இதற்காக மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டத்தோ சாமிவேலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
பின்னர் தமிழர்களின் முக்கியப் பண்டிகையான தைப் பூசத்தை அரசு தேசிய விடுமுறையாக அறிவித்தது. அப்படி இருந்தும் கூட தமிழர்கள் வருகிற பொதுத் தேர்தலில் ஆளும் தேசிய கூட்டணிக்கு வாக்களிப்பது சந்தேகம்தான் என்று கவலை தெரிவித்துள்ளார் பிரதமர் படாவி.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய வம்சாவளியினரின் குறைகளை போக்க வேண்டும் என நான் கூறியுள்ளேன். இது மிகவும் தீவிரமான பிரச்னை, கவனமாக கையாள வேண்டும் எனவும் கூறியுள்ளேன்.
இருந்தாலும், தேர்தலில், இந்திய வம்சாவளியினரின் ஓட்டுகள் ஆளும் கட்சிக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அவர்களின் ஓட்டுகள் கணிசமான அளவு குறையும் என்றார் படாவி.
கைது செய்யப்பட்டுள்ள ஹிண்ட்ராப் நிர்வாகிகள் ஐந்து பேரில் வழக்கறிஞர் மனோகரன் மற்றும் கணபதி ராவ் ஆகிய இருவரும் எதிர்க்கட்சிக் கூட்டணியின் உறுப்பினர்கள் ஆவர். எனவே எதிர்க்கட்சி கூட்டணிக்கு அதிக அளவில் தமிழர்களின் வாக்குகள் போகக் கூடும் என்ற பயத்தில் ஆளுங்கட்சிக் கூட்டணி உள்ளது.
இதனால்தான் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் மூலமாக தமிழர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அது இறங்கியுள்ளது. அதேசமயம், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கும் இந்தத் தேர்தலில் குறையக் கூடும் என்ற பேச்சும் பரவலாக உள்ளது.
இதனால் அந்தக் கட்சியும் தமிழர்களுக்கு சாதகமாக பேச ஆரம்பித்துள்ளது. இதுவரை மலேசியாவில் தமிழர்கள் பாரபட்சமாக நடத்தப்படவில்லை என்று கூறி வந்த அக்கட்சியின் தலைவர் டத்தோ சாமிவேலு தற்போது அந்த நிலையிலிருந்து மாறியுள்ளார்.
இந்தக் கட்சியின் மாநாடு சமீபத்தில் கோலாலம்பூரில் நடந்தது. அப்போது அக்கட்சியின் சார்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானது, அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க, இந்திய வம்சாவளியினருக்கு அதிக வாய்ப்புகள் அளிக்க வேண்டும், அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அரசு துறைகளில் பணியாற்றும் இந்திய வம்சாவளியினருக்கு பதவி உயர்வுகள் அளிக்க வேண்டும், தொழில் பயிற்சி மற்றும் குறுகிய கால கடன் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் ஆகியவை.
இதன் மூலம் தமிழர்களின் வாக்குகளை இழக்கக் கூடுமோ என்ற அச்சம் சாமிவேலு கட்சிக்கும் வந்திருப்பதாக கருதப்படுகிறது.
இந்தப் புதிய சூழ்நிலை காரணமாக, வருகிற பொதுத் தேர்தலில் தமிழர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.