பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை உயர்வு.. தோல்வியை மறைக்க முயற்சிக்காதீங்க.. உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
சென்னை: பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டு , பொறுத்துக் கொள்ளுங்கள்.. அதை செய்யாதீர்கள்.. இதை செய்யாதீர்கள் என்று மத்திய அரசு அறிவுரை கூறுவது தனது தோல்வியை மறைக்கும் முயற்சி என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளை 5 மாநிலத் தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.84க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ. 3.14 விலை உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 103.98க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ. 3.11 விலை உயர்ந்துள்ளது.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ஏழை - எளிய - நடுத்தர வர்க்க மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் Petrol, Diesel, CNG விலையை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, 'பொறுத்துக்கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்' என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே ஆகும். மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பதிவு திமுகவினர் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தேர்தலுக்கு முன்பே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5 மாநில தேர்தல் நடைபெற்றதால், மத்திய அரசு பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலையை ஏற்றாமல் அமைதி காத்தது. தற்போது தேர்தல் முடிவுகள் வெளியான பின், மத்திய அரசு விலையேற்றத்தை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications