குட்டு குட்டுனு திமுகவை.. கரூரில் விஜய் பேச்சை கவனிச்சீங்களா? வீசிய அஸ்திரத்தின் சட்டப் பின்னணி
சென்னை: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்கனவே நிவாரணங்கள் வழங்கப்பட்டுவிட்டன. இப்போது எதற்கு அரசு வேலை? கும்பகோணம் மகாமகம் போன்ற முந்தைய விபத்துகளில் இதுபோல வேலைகள் வழங்கப்பட்டதில்லை. தகுதி மற்றும் தேர்வுகளுக்காகப் படித்துக் கொண்டிருக்கும் பல லட்சம் இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவை இந்த முடிவு பாதிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.
பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி தந்துள்ள தராசு ஷ்யாம், "கரூரில் விஜய்யின் பேச்சு கிட்டத்தட்ட இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடாகவே பார்க்கப்படுகிறது.. திமுகவுக்கு இது ஒரு சவால்.. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்..

கரூரில் விஜய் பேச்சு
விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட், அவருக்கான கவர்ச்சி.. அவருடைய எளிய பேச்சு, அதாவது கேஷூவலான பேச்சு.. மக்களின் உணர்வுகளை தூண்டும் அவரது அணுகுமுறை.. எளிமையாக பேசுகிறார்.. குறைத்து பேசுகிறார்..
விஜய் திமுகவை மிகக் கடுமையாகச் சாடுகிறார். அதிமுகவை ஒரு தீர்ந்துபோன சக்தி என்று கடந்து சென்று, திமுகவை மட்டுமே தனது பிரதான எதிரியாக நிலைநிறுத்துகிறார். கரூர் சம்பவத்தில் முழுக்க முழுக்க அரசியல் சதி உள்ளது, அதற்கு காவல்துறையே உடந்தையாக இருந்தது என்பதும்தான் இன்றைய பேச்சின் சாராம்சம். ஆனால், விசாரணை நடந்து கொண்டிருக்கும் ஒரு சூழலில், மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் இப்படி பொதுமேடையில் பேசுவது சட்டப்படி ஏற்புடையதல்ல.
காவல்துறை சதி செய்தது
சிபிஐ விசாரணை மிகவும் நுணுக்கமானது. அவர்கள் ஒரே கேள்வியைத் தான் சில நாட்கள் இடைவெளி விட்டு, மாற்றி மாற்றித் தொடர்ந்து கேட்பார்கள்.. சிபிஐ விசாரணை நடத்தியபோது, இந்த மேடை குற்றச்சாட்டுகளை விஜய்யிடம் சொன்னாரா என்பது அவர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போதுதான் நமக்குத் தெரியவரும்.
விஜய் இப்போது முதலமைச்சராக இருக்கிறார். அவரே பொதுமேடையில் "காவல்துறை சதி செய்தது'" என்று ஒருதலைப்பட்சமாகப் பேசிய பிறகு, அவருக்கு கீழ் வேலை செய்யும் கரூர் டவுன் போலீஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் எப்படி அதற்கு மாறாக சாட்சி சொல்ல முடியும்? அவர்கள் தான் இந்த வழக்கின் முதன்மைச் சாட்சிகள். அதனால்நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு முன்பே முதலமைச்சர் பதவியில் இருப்பவர் இப்படிப் பேசுவது சட்டப்படி தவறானது என்பது ஒரு வழக்கறிஞராக எனது கருத்து.
குட்டு குட்டுன்னு திமுகவை?
அதேபோல கரூர் சம்பவத்தின் எப்ஐஆரில் மதியழகன் (A1), பொதுச்செயலாளர் ஆனந்த் (A2), சி.டி.நிர்மல்குமார் (A3) ஆகிய 3 பேர் மட்டுமே உள்ளனர்.. விஜய் பெயர் இல்லை. இன்றைய கூட்டத்தில் மதியழகனுக்குப் பெரிய வரவேற்பு இருந்தது.
ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் திமுக அரசை '"குட்டு குட்டு" என குட்டியது' என்று விஜய் மேடையில் சொல்வது உண்மையில்லை. "அரசியல் சண்டைகளை நீதிமன்றத்திற்குள் வைக்காதீர்கள்" என்று நீதியரசர் கண்டித்தாரே தவிர, அது ஒன்றும் குட்டு அல்ல. தவெக வழக்கறிஞர்களும் உடனே வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
அதேபோல், நிர்மல்குமாருக்கு எதிரான லுக்அவுட் நோட்டீஸிற்கு நீதிமன்றம் தடை விதித்ததை அரசுக்கு விழுந்த குட்டு என முதலமைச்சர் கூற முடியாது. லுக்அவுட் நோட்டீஸ் போடுவது அரசின் உரிமை, தடை வாங்குவது தனிநபர் உரிமை. இந்த விஷயங்களில் முதலமைச்சருக்கு யாரோ தவறான வழிகாட்டுதலை வழங்குகிறார்கள்.
அரசு வேலை தேவையா
முதலமைச்சர் போன்ற உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் நீதிமன்ற விசாரணையைப் பாதிக்கும் வகையிலோ அல்லது சாட்சிகளை இன்ஃப்ளுயன்ஸ் செய்யும் வகையிலோ பேசக்கூடாது. செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதையும் அரசுக்கு விழுந்த குட்டாக விஜய் வர்ணிக்கிறார். நீதிமன்றம் தனிநபர் சுதந்திரம் மற்றும் சட்ட அம்சங்களை ஆராய்ந்துதான் முன்ஜாமீன் வழங்குமே தவிர, அவரைக் குற்றமற்றவர் என்று கருதாது.
பாதிக்கப்பட்ட 32 பேருக்கு அரசு வேலை வழங்கும் முடிவை ஒரு பத்திரிகையாளராக நான் எதிர்க்கிறேன். ஏற்கனவே நிவாரணங்கள் வழங்கப்பட்டுவிட்டன. கும்பகோணம் மகாமகம் போன்ற முந்தைய விபத்துகளில் இதுபோல வேலைகள் வழங்கப்பட்டதில்லை. தகுதி மற்றும் தேர்வுகளுக்காகப் படித்துக் கொண்டிருக்கும் பல லட்சம் இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவை இந்த முடிவு பாதிக்கும்.. அவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தும்." என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications